கதம்பம்

மறந்துபோன மருத்துவ உணவுகள்

Published On 2022-11-23 08:51 GMT   |   Update On 2022-11-23 08:51 GMT
  • அஷ்டாம்சக் கஞ்சி வயிற்றுப்போக்கு ஏற்பட்ட பிறகு, சாப்பிடக்கூடிய மித உணவு. ஓமம் இருப்பதால், செரிமானத்துக்கு உதவும்.
  • பூண்டு மிளகுக்குழம்பு பசியைத் தூண்டி, செரிமானத்தைத் தரும். நோய்த் தொற்றைத் தடுக்கும்.

'ராத்திரியெல்லாம் புள்ளை இருமிக்கிட்டே இருந்தானே... மதியம், பச்சரிசி, வெந்தயம், துருவிய தேங்காய், ஒரு கை உரிச்ச வெள்ளைப் பூண்டைப் போட்டுக் குழையக் கஞ்சி வெச்சு, சூடாக் குடும்மா!

தொட்டுக்கிறதுக்கு, ஒரே ஒரு வரமிளகாய் வெச்சு, கொள்ளுத் துவையல் அரைச்சிரு!'' என்று திருகையில் (எந்திரம்) உளுந்தையோ, அரிசியையோ போட்டு ரவையாக உடைத்தபடி, கண்டாங்கிச் சேலை கட்டிய அப்பத்தாக்களும் ஆயாக்களும் சொல்லிய காலமெல்லாம் கடந்து, நைட்டியில் பாட்டிகள் உலவியபடி, பேரப்பிள்ளைகளுக்கு உணவு, மருந்து எதுவானாலும் இன்டர்நெட்டில் தேடிக்கொடுக்கும் காலம் இது என்பதால், 'மறந்துபோன' மருத்துவ உணவுகளை நினைவூட்டும் நேரம் இது!

அஷ்டாம்சக் கஞ்சி

தேவையானவை: கோதுமை, கழுவி காயவைத்த கேழ்வரகு, பொட்டுக்கடலை, பார்லி அரிசி, ஜவ்வரிசி, பாசிப்பயறு - முறையே அரை ஆழாக்கு, கசகசா - கால் ஆழாக்கு, ஓமம் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை: எல்லாவற்றையும், வெறும் கடாயில் தனித்தனியே வறுத்து, ஒன்றாகச் சேர்த்துப் பொடித்துச் சலித்து வைத்துக் கொள்ளவும்.

இந்தப் பொடியில் ஒரு ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் கரைத்து, கொதிக்க வைத்துப் பால் சேர்த்துக் குடித்தால், தெம்பு கிடைக்கும். சோர்வே இருக்காது.

மருத்துவப் பலன்கள்:

வயிற்றுப்போக்கு ஏற்பட்ட பிறகு, சாப்பிடக்கூடிய மித உணவு. ஓமம் இருப்பதால், செரிமானத்துக்கு உதவும்.

பூண்டு மிளகுக்குழம்பு

தேவையானவை: உரித்த பூண்டு - ஒரு கிண்ணம், தனியா - 3 டேபிள்ஸ்பூன், மிளகு - 2 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, உளுத்தம்பருப்பு, சீரகம் - தலா 2 டீஸ்பூன், கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி, புளி - சிறிய உருண்டை, உப்பு - தேவையான அளவு, நல்லெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன்.

செய்முறை: கடாயில் தனியா, மிளகு, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு ஆகியவற்றை வறுத்து மிக்ஸியில் பொடிக்கவும். சீரகம், கறிவேப்பிலையைப் பச்சையாக அரைத்துக்கொள்ளவும். கரைத்த புளித்தண்ணீரில் கறிவேப்பிலை விழுது, வறுத்து அரைத்த பொடி, உப்பையும் போட்டுக் கட்டி இல்லாமல் கரைத்து வைத்துக்கொள்ளவும்.

கடாயில் அரை ஸ்பூன் எண்ணெய் விட்டு உரித்த பூண்டு சேர்த்து, லேசாகச் சிவக்கும் வரை வறுத்து தண்ணீர் ஊற்றி வேகவிடவும். வெந்ததும், புளிக்கரைசலைச் சேர்த்து, நன்றாகக் கொதிக்கவிடவும். கெட்டியானதும் இறக்கவும். மீதம் உள்ள எண்ணெயில் கடுகு தாளித்துச் சேர்க்கவும்.

மருத்துவப் பலன்கள்: பசியைத் தூண்டி, செரிமானத்தைத் தரும். நோய்த் தொற்றைத் தடுக்கும். பூண்டுக்கு, கொழுப்பைக் குறைக்கும் தன்மை உண்டு.

அமிர்தப் பொடி: (இந்தப் பொடியைப் பயன்படுத்தி பத்திய ரசம் வைக்கலாம்)

தேவையானவை: தனியா - ஒரு சிறிய கிண்ணம், ஓமம், துவரம் பருப்பு - அரை கிண்ணம், மிளகு, உடைத்த சுக்கு - தலா கால் கிண்ணம், சீரகம், கண்டதிப்பிலி - தலா ஒரு கிண்ணம், காய்ந்த கறிவேப்பிலை - அரை கிண்ணம், பெருங்காயம் - ஒரு கட்டி.

செய்முறை: கொடுத்துள்ள பொருட்களை வெறும் கடாயில் வறுத்து மிக்ஸியில் பொடித்து, சலித்து வைத்துக்கொள்ளவும். வெயிலில் காய வைத்த புளியுடன், உப்பு சேர்த்துப் பொடித்து வைத்துக்கொள்ளவும். தண்ணீரைக் கொதிக்க வைத்து அதில் புளி, உப்பு பொடித்த பொடி, அமிர்தப் பொடி சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும். பத்திய ரசம் தயார்.

மருத்துவப் பலன்கள்: நோயிலிருந்து மீண்ட பிறகு, ஏற்படும் பசி மந்தத்தைப் போக்கும். எப்படிப்பட்ட வயிற்றுப் பிரச்சனை இருந்தாலும், அதைப் போக்கி உடலைத் தெம்பாக்கும். குழந்தைகளுக்குப் பசியின்மை இருந்தால், சுடு சாதத்தில் போட்டுப் பிசைந்து தரலாம்.

-அண்ணாமலை சுகுமாரன்

Tags:    

Similar News

நாத்தனார்
அருமருந்து