செய்திகள்
வேலூர் தொகுதி

வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல்- வேட்பு மனுத்தாக்கல் நாளை தொடக்கம்

Published On 2019-07-10 05:42 GMT   |   Update On 2019-07-10 06:43 GMT
வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் ஆகஸ்டு 5-ந் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் நாளை தொடங்குகிறது.
வேலூர்:

வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் ஆகஸ்டு 5-ந் தேதி நடக்கிறது.

இதற்கான வேட்பு மனுத்தாக்கல் நாளை தொடங்குகிறது. மனுத்தாக்கல் செய்ய 18-ந் தேதி கடைசி நாளாகும். 19-ந் தேதி மனுக்கள் பரிசீலனை நடக்கிறது. 22-ந் தேதி வரை மனுக்கள் வாபஸ் பெறலாம். இதையடுத்து அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.

அ.தி.மு.க. சார்பில் கூட்டணி கட்சி வேட்பாளராக புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், தி.மு.க. சார்பில் துரைமுருகன் மகன் கதிர்ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். கடந்த முறை போட்டியிட்ட அ.ம.மு.க., இந்த தேர்தலில் போட்டியிடவில்லை என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் அறிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் சார்பில் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.

வேலூர் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க., அ.தி.மு.க. இடையேதான் நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.



இதனால் இந்த இரு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் தேர்தல் பணியில் சுறுசுறுப்பாக ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் ஒவ்வொரு பகுதியாக சென்று முக்கிய பிரமுகர்களை சந்தித்து கூட்டங்களை நடத்தி ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஏ.சி.சண்முகம் நாளை வியாழக்கிழமை வேட்பு மனுத்தாக்கல் செய்கிறார். தி.மு.க. சார்பில் போட்டியிடும் கதிர்ஆனந்த் 12-ந் தேதி மனுத்தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேட்பு மனுக்களை வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான சண்முகசுந்தரத்திடம் தாக்கல் செய்யலாம். காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை மனுத்தாக்கல் செய்ய நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தேர்தலில் போட்டியிட மனுதாக்கல் செய்யும் வேட்பாளர் வைப்புத் தொகை ரூ.25 ஆயிரம் பணமாக செலுத்த வேண்டும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினத்தவர்கள் டெபாசிட் தொகை ரூ.12,500-ஐ செலுத்த வேண்டும்.

வேட்பு மனுத்தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்களுடன் 3 கார்கள் மட்டுமே கலெக்டர் அலுவலகத்துக்குள் அனுமதிக்கப்படும்.

மனுத்தாக்கல் செய்யும் போது வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே வர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது. அடுத்தடுத்த நாட்களில் முக்கிய கட்சிகள் வேட்புமனுத்தாக்கல் செய்ய உள்ளதால் எஸ்.பி. தலைமையில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Tags:    

Similar News