செய்திகள்

வருகிற 13-ந் தேதி கன்னியாகுமரியில் ராகுல்காந்தி தேர்தல் பிரசாரம் தொடக்கம்

Published On 2019-03-07 08:49 IST   |   Update On 2019-03-07 08:49:00 IST
கன்னியாகுமரியில் வருகிற 13-ந் தேதி ராகுல் காந்தி தேர்தல் பிரசாரம் தொடங்குவதாகவும், இதில் திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்பதாகவும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். #RahulGandhi
சென்னை:

பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் அனைத்தும் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு விவகாரங்களில், தேர்தல் அறிக்கை தயாரிப்பு, பிரசார வியூகம் அமைப்பு உள்ளிட்ட பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றன. இதில் தமிழகத்தை பொறுத்தவரை அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. தலைமையில் 2 பிரதான கூட்டணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.

இதன் தொடர்ச்சியாக பிரசார களத்தில் அவை தீவிரம் காட்டி வருகின்றன. இதற்காக தேசிய கட்சிகளின் தலைவர்கள் தொடர்ந்து தமிழகத்துக்கு பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதில் பா.ஜனதாவை பொறுத்தவரை பிரதமர் மோடி மற்றும் கட்சித்தலைவர் அமித்ஷா ஆகியோர் தமிழகத்தில் பிரசார பொதுக்கூட்டங்களை நடத்தி உள்ளனர்.

இதைப்போல காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர்களும் தமிழகத்தில் தொடர்ந்து நிர்வாகிகள் மற்றும் மாநில தலைவர்களுடன் சந்தித்து ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக கட்சித்தலைவர் ராகுல் காந்தி வருகிற 13-ந் தேதி தமிழகத்தில் பிரசாரத்தை தொடங்குகிறார்.

இந்த கூட்டம் கன்னியாகுமரியில் நடப்பதாக மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் உள்ளிட்ட ஜனநாயக, மதசார்பற்ற கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு சிறப்பாக நடந்து முடிந்து உள்ளது. தி.மு.க. முன்னாள் தலைவர் மறைந்த கருணாநிதியின் அணுகுமுறையுடன், கூட்டணி கட்சிகளுக்கு நியாயமான முறையில் தொகுதி பங்கீட்டை அற்புதமாக செய்து முடித்திருக்கும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை பாராட்டுகிறேன். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் தொண்டர்களின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழகத்தில் மதசார்பற்ற சக்திகளின் தேர்தல் பிரசாரத்தை தொடங்கிவைப்பதற்காக ராகுல்காந்தி வருகிற 13-ந் தேதி (புதன்கிழமை) கன்னியாகுமரிக்கு வருகிறார். அங்கு பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றுகிறார். இந்த கூட்டத்தில் தி.மு.க. உள்ளிட்ட மதசார்பற்ற கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்று உரையாற்ற இருக்கிறார்கள்.

இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள கன்னியாகுமரியில் ராகுல் காந்தி தொடங்கும் இந்த பிரசாரம் நாடு முழுவதும் எதிரொலிக்கப்போகிறது. தேசிய அளவில் ஏற்படுகிற மாற்றத்தில் தமிழகம் முன்னணி வகிக்கும் வகையில் கன்னியாகுமரி கூட்டம் அமையப்போகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  #RahulGandhi

Similar News