கரடிவாவி அரசு ஆஸ்பத்திரியில் கதவு கண்ணாடியை உடைத்தது சிறுத்தையா? பொதுமக்கள் அச்சம்
- கணினியின் வயர்கள் சேதமாக்கப்பட்டு கணினிகள் கீழே தள்ளப்பட்டு கிடந்தது.
- மர்ம விலங்கு சிறுத்தையாக இருக்குமோ என பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனர்.
பல்லடம் :
பல்லடம் அருகே கரடிவாவியில் அரசு மருத்துவமனை உள்ளது. இந்த நிலையில், மருத்துவமனைக்கு சென்ற செவிலியர்கள் முன்புற கதவின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து காமநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு சென்று காமநாயக்கன்பாளையம் போலீசார் பார்த்தபோது, கதவின் கண்ணாடிகள் மட்டும் உடைக்கப்பட்டு இருந்தது.
மேலும் கதவுகளில் கீறல்கள் ஏற்பட்டிருந்தது. இதையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது மேசை மீது இருந்த கணினியின் வயர்கள் சேதமாக்கப்பட்டு கணினிகள் கீழே தள்ளப்பட்டு கிடந்தது. இதையடுத்து போலீசார் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் ஏதோ ஒரு மர்ம விலங்கின் காலடித்தடம் உள்ளதாக தெரிவித்தனர். இதையடுத்து காமநாயக்கன்பாளையம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு கரடிவாவியில் சிறுத்தை உலாவதாக தகவல்கள் வந்தது. இதனால் அந்த மர்ம விலங்கு சிறுத்தையாக இருக்குமோ என பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனர்.