உள்ளூர் செய்திகள்

கஞ்சா விற்ற 5 வாலிபர்கள் கைது

Published On 2022-08-06 09:09 GMT   |   Update On 2022-08-06 09:09 GMT
  • கஞ்சா விற்ற 5 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
  • விருதுநகர் சின்ன பள்ளிவாசல் தெருவில் போலீசார் ரோந்து சென்றனர்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்டத்தில் கஞ்சா மற்றும் புகையிலை விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கையை எடுத்து வருகின்றனர். மேலும் கஞ்சா விற்பனை செய்பவர்களின் வங்கி கணக்குகள், சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் விருதுநகர் பஜார் போலீசார் சம்பவத்தன்று ரோந்து சென்றனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த 3 வாலிபர்கள் போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்ப முயன்றனர்.

உடனே போலீசார் விரைந்து செயல்பட்டு 3 பேரையும் பிடித்து சோதனை செய்தபோது அவர்கள் கஞ்சா விற்றது தெரியவந்தது. தொடர் விசாரணையில் அவர்கள் குல்லூர் சந்தை இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த புவனேஸ்வரன் (வயது 26), இலகேஸ்வரன் (19), கோகுல கண்ணன் (19) என தெரிய வந்தது.

3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.இதேபோல் விருதுநகர் லட்சுமி நகரில் உள்ள நேருஜி தெருவை சேர்ந்த கிஷோர் (28) என்பவரை கைது செய்த பாண்டியன் நகர் போலீசார் அவரிடம் இருந்து 25 கிராம் கஞ்சா, 18 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

விருதுநகர் சின்ன பள்ளிவாசல் தெருவில் மேற்கு போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் குமார், சிவா ஆகியோர் கஞ்சா விற்றது தெரியவந்தது. இதில் விக்னேஷ் குமாரை போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய சிவாவை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News