உள்ளூர் செய்திகள்

சாலை பிரச்சினையால் சாதி கலவரம் ஏற்படும் அபாயம்

Published On 2022-11-21 09:41 GMT   |   Update On 2022-11-21 09:41 GMT
  • கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் புகார்
  • ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தல்

வேலூர்:

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் இன்று நடந்தது‌. இதில் பொதுமக்கள் மனு அளித்தனர்.

காட்பாடி அருகே உள்ள காசி குட்டை கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சார்பில் மனு அளித்தனர். அதில் எங்கள் கிராமத்தில் 750-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் ஊரில் செல்போன் டவர் கிடைக்காததால் ஆன்லைன் வகுப்பு மற்றும் தேர்வுக்கு படிக்கும் மாணவர்கள் அவதிப்படுகின்றனர். அவர்களின் நலன் கருதி செல்போன் டவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

கரி கிரி வரதராஜபுரம் பொதுமக்கள் அளித்த மனுவில் கரி கிரி பொன்னியம்மன் கோவில் தார் சாலை வழியாக செல்வதை தடுத்துள்ளனர். இதனால் எங்கள் கிராமத்தில் சாதி கலவரம் ஏற்படும் என்ற அச்சம் உள்ளது. எங்கள் பகுதிக்கு சாலை வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

பாட்டாளி மக்கள் கட்சி குடியாத்தம் நகர செயலாளர் ரமேஷ் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

குடியாத்தம் நேதாஜி சவுக்கு அருகில் இருக்கும் மதுபான கடையை அகற்ற வேண்டும். பிச்சனூர் பேட்டை கங்காதர சாமி நகராட்சி நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும்.

குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரி ரோட்டில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்‌. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News