உள்ளூர் செய்திகள்

ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.95 லட்சம் மோசடி

Published On 2022-09-25 08:58 GMT   |   Update On 2022-09-25 08:58 GMT
  • திருச்சியில் நிலப்பத்திரம் பதிவு செய்து தருவதாக கூறி ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.95 லட்சம் மோசடி நடந்துள்ளது
  • மாநகர குற்ற பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோசலை ராமன், மோசடி செய்த தந்தை, மகனான லிங்கசேகர், ராஜேஸ்வர பாண்டியன் ஆகிய இருவர் மீதும் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளார்

திருச்சி:

திருச்சி கே.சாத்தனூர் கீழத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜன் (வயது 69). ரியல் எஸ்டேட் அதிபர்.

இந்த நிலையில் ரேஸ் கோர்ஸ் ரோடு கேசவன் நகர் காஜாமியான் தெரு பகுதியைச் சேர்ந்த லிங்கசேகர் என்பவருக்கு ரேஸ் கோர்ஸ் சாலையில் 47 ஏக்கர் நிலம் இருப்பது தெரியவந்தது.

அதைத் தொடர்ந்து நாகராஜன் அவரிடம் சென்று அந்த நிலத்தை வாங்குவதற்கு பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் ஒரு ஏக்கருக்கு ரூ.4 லட்சத்து 70 ஆயிரம் வீதம் 47 ஏக்கருக்கு ரூ.2 கோடியே 20 லட்சத்து 90 ஆயிரம் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து நாகராஜன், லிங்க சேகருக்கு பல்வேறு தவணைகள் வாயிலாக வங்கி மூலமும், நேரிலும் ரூ.95 லட்சத்து ஆயிரம் கொடுத்தார்.

அதன் பின்னர் அவரும் மகன் ராஜேஸ்வர பாண்டியனும் சேர்ந்து நிலத்தை பதிவு செய்ய முன்வராமல் இழுத்து அடித்தனர். அதைத்தொடர்ந்து கொடுத்த முன் பணத்தை திருப்பி நாகராஜன் கேட்டார்.

ஆனால் நிலத்தையும் பத்திரப்பதிவு செய்யாமல், பணத்தையும் திரும்ப கொடுக்காமல் தந்தையும், மகனும் சேர்ந்து அவரை ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட நாகராஜன் திருச்சி மாநகர போலீஸ் கமிஷன் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

அதன் அடிப்படையில் மாநகர குற்ற பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோசலை ராமன், லிங்கசேகர், ராஜேஸ்வர பாண்டியன் ஆகிய இருவர் மீதும் மோசடி உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளார். உதவி போலீஸ் கமிஷனர் பாரதிதாசன் விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News