உள்ளூர் செய்திகள்

திருச்சியில் 12 நாட்கள் நடைபெற்ற பழமையான கோவில் திருவிழா

Published On 2022-06-11 09:30 GMT   |   Update On 2022-06-11 09:30 GMT
  • திருச்சி விமான நிலைய ஓடுபாதை அருகே அமைந்துள்ள பிறாயடி கருப்பு கோவில் திருவிழாவையொட்டி சப்பர பவனி நடைபெற்றது.
  • விமான நிலையத்திற்குள் செல்ல விமான நிலைய அதிகாரிகள், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் தமிழ்நாடு காவல்துறையினரின் அனுமதி வழங்கப்பட்டது

திருச்சி:

திருச்சி விமான நிலையத்தை அடுத்த கோளரங்கம் அருகில் பிறாயடி கருப்பு கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலின் திருவிழா ஆண்டுதோறும் 12 நாட்கள் நடைபெறும். இந்த திருவிழாவானது ஆங்கிலேயர் காலம் முதல் ெதான்று தொட்டு நடத்தப்பட்டு வருகிறது.

திருவிழா நடைபெறும் காலங்களில் திருச்சி விமான நிலைய ஓடுபாதை அருகில் உள்ள அய்யனார் மற்றும் காளியம்மன் கோவில் பகுதிக்கு சிறப்பு அனுமதி பெற்று விமான நிலைய வளாகத்திற்குள் சென்று சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது.

இந்த சிறப்பு பூஜை சுமார் 150 ஆண்டு காலமாக கொட்டப்பட்டு கிராம மக்களால் நடத்தப்பட்டு வருகிறது. இந்த திருவிழா நடைபெறுவதற்கு சுமார் ஒரு மாத காலம் முன்பாக விமான நிலைய அதிகாரிகள் மற்றும் கொட்டப்பட்டு கிராம மக்கள் இணைந்து பாதுகாப்பு குறித்து ஆலோசனை கூட்டம் நடத்துவார்கள்.

அதன் பேரில் திருவிழா விமான நிலைய ஓடுபாதை அருகில் உள்ள அய்யனார் மற்றும் காளியம்மன் கோவிலுக்கு சிறப்பு பூஜை நடத்துவதற்காக ஊர்வலமாக சென்று வர அனுமதி குறித்து ஆலோசிக்கப்பட்டு அனுமதி வழங்கப்படுகிறது.

அந்த வகையில் கடந்த மாதம் ஆலோசனை கூட்டம் நடத்தி சிறப்பு அனுமதி பெற்று நேற்று திருவிழா நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த திருவிழாவின் போது ஓடுபாதை அருகில் உள்ள அய்யனார் மற்றும் காளியம்மன் கோவிலுக்கு சென்று வருவதற்கு விமான நிலைய அதிகாரிகள், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் தமிழ்நாடு காவல்துறையினரின் அனுமதி வழங்கப்பட்டது.

இதையடுத்து பாதுகாப்புடன் விமான நிலைய வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட்டு ஓடுபாதை அருகிலுள்ள கோவிலுக்கு சென்று அய்யனார் உருவமானது ஊர்வலமாக ரன்வேயில் எடுத்து செல்லப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

இந்த நிலையில் வருடத்தில் ஒரு நாள் மட்டும் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டு அந்த கோவிலில் திருவிழா நடைபெறுகிறது. இந்த பூஜையானது நேற்று காலை தொடங்கியது. அப்போது சப்பரத்தில் அய்யனார் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு விமான ஓடுபாதை அருகில் பூஜை நடத்திய பிறகு மீண்டும் பிறாயடி கருப்பு கோவிலுக்கு சப்பரத்தை ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

இந்தநிலையில் அவர்கள் எடுத்து வந்த சப்பரம் பிறாயடி கருப்பு கோவிலில் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

Tags:    

Similar News