- திருச்சி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றனர்
- கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு
திருச்சி,
2022-23 ஆம் கல்வி ஆண்டிற்கான எஸ்.எஸ்.எல்.சி. அரசுப் பொதுத் தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் 6-ந்தேதி துவங்கி 20-ந்தேதி வரை நடைபெற்றது. திருச்சி, லால்குடி, முசிறி உள்ளிட்ட 3 கல்வி மாவட்டங்களில் 449 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள், தனித்தேர்வர்கள் என 172மையங்களில் 16,737 மாணவர்களும், 17,032 மாணவிகளும் என மொத்தம் 33,769 மாணவ, மாணவிகள் பொதுத் தேர்வினை எழுதினர். இந்த தேர்வுக்கான தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டது. இதில் திருச்சி மாவட்டத்தில் 94.28 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 15,325 மாணவர்களும் 16 ஆயிரத்து 513 மாணவிகளும் என மொத்தம் 31,838 பேர்தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 94.28 சதவீதம் ஆகும். இது கடந்த ஆண்டை விட 2.03 சதவீதம் அதிகமாகும்.இதில் 52 அரசு பள்ளிகள், 8 ஆதிதிராவிட நலப் பள்ளிகள், 3 பழங்குடியினர் நலப் பள்ளிகள், 6 அரசு உதவி பெறும் பள்ளிகள், 11 பகுதி உதவி பெறும் பள்ளிகள், 64 மெட்ரிக் மற்றும் சுயநிதி பள்ளிகள் என மொத்தம் 144 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன. பள்ளிக்கு வந்த மாணவ மாணவிகள் தங்களது மொபைல் போன்களில் தங்கள் தேர்ச்சியையும், பெற்ற மதிப்பெண்களையும் பார்த்து உற்சாகமடைந்தனர்.