உள்ளூர் செய்திகள்

வனவிலங்கு சரணாலயத்தை காண வரும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரிப்பு

Published On 2022-07-09 08:43 IST   |   Update On 2022-07-09 08:43:00 IST
  • வனவிலங்கு சரணாலயத்தில் மான்கள் தண்ணீர் குடிப்பதற்காக 17 செயற்கை தொட்டிகளும், 40 குளங்களும் உள்ளன.
  • கடந்த காலங்களில் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக மான்கள் காட்டை விட்டு வெளியேறி செல்லும் சம்பவம் நடந்தது வந்தது.

நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் வனவிலங்கு சரணாலயம் உள்ளது. 24 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பசுமை மாறாக காடுகள் அமைந்துள்ள இந்த சரணாலயத்தில் வெளிமான், புள்ளிமான்கள், குரங்குகள், குதிரை மற்றும் நரி, முயல் உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் உள்ளன.

இந்த வனவிலங்கு சரணாலயத்தில் மான்கள் தண்ணீர் குடிப்பதற்காக 17 செயற்கை தொட்டிகளும், 40 குளங்களும் உள்ளன.

சரணாலயத்தில் வனவிலங்குகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்போது செயற்கையாக கட்டப்பட்டுள்ள தொட்டியில் வனத்துறையினர் தண்ணீர் ஊற்றுவார்கள். ஆனால் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு கோடை காலத்தில் மழை பெய்ததால் விலங்குகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படவில்லை.

கடந்த காலங்களில் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக மான்கள் காட்டை விட்டு வெளியேறி செல்லும் சம்பவம் நடந்தது வந்தது. ஆனால் இந்த ஆண்டு கோடைமழையால் மான்களுக்கு போதிய புல்லும் தண்ணீரும் தட்டுப்பாடின்றி கிடைத்ததால் மான்கள் காட்டை விட்டு வெளியே செல்லவில்லை.

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக சரணாலயம் மூடப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் வனவிலங்குகள் எந்தவித இடையூறும் இன்றி சுதந்திரமாக சுற்றிதிரிந்து வந்தன.

கொரோனா தொற்று குறைந்ததால் ஊரடங்கு தளர்த்தப்பட்டு சுற்றுலா பயணிகள் பார்வையிட வனவிலங்குகள் சரணாலயம் திறக்கப்பட்டுள்ளது. தற்போது சரணாலயத்தில் மான்கள், நரிகள், குதிரை, குரங்குகள் முயல்கள், காட்டுப்பன்றிகள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிக்கின்றன.

இந்த வனவிலங்குகளை காண சரணாலயத்துக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

Tags:    

Similar News