உள்ளூர் செய்திகள்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தரிசனத்திற்காக நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்களை படத்தில் காணலாம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது

Published On 2022-12-12 10:20 GMT   |   Update On 2022-12-12 10:20 GMT
  • பல மணி நேரம் வரிசையில் காத்திருந்து தரிசனம்
  • வாகனங்கள் நிறுத்த இடம் இல்லாமல் பக்தர்கள் அவதி

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். விடுமுறை நாட்களில் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.

இக்கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்றான கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 24-ந் தேதி துர்க்கை அம்மன் உற்சவத்துடன் தொடங்கி நேற்று முன்தினம் சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் நிறைவடைந்தது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வான மகா தீபம் கடந்த 6-ந் தேதி கோவிலின் பின்புறம் உள்ள மலை உச்சியில் ஏற்றப்பட்டது. இந்த மகா தீபம் 11 நாட்கள் மலையின் உச்சியில் காட்சி அளிக்கும். அதன்படி நேற்று 6-வது நாளாக மலையில் உச்சியில் மகா தீபம் காட்சி அளித்தது.

இந்த நிலையில் கார்த்திகை தீபத் திருவிழாவின் போது வந்து சாமி தரிசனம் செய்ய முடியாத பக்தர்கள் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான நேற்று அருணாசலேஸ்வரர் கோவிலும் ஏராளமானோர் வருகை தந்தனர். இதில் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் அதிகளவில் வருகை தந்தனர். இதனால் கோவிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

பொது தரிசனம் மட்டுமின்றி கட்டண தரிசன வழியிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். இதனால் பொது தரிசனம் வழியில் சுமார் 2.30 மணி நேரத்திற்கு மேலும், கட்டண தரிசன வழியில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலும் பக்தர்களுக்கு காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இதனால் நேற்று கோவில் பரபரப்பான காணப்பட்டது.

மேலும் கோவிலும் சாமி தரிசனம் செய்ய கார் உள்ளிட்ட வாகனங்களில் வந்த பக்தர்கள் தங்கள் நிறுத்த போதிய இடம் இல்லாமல் தவித்தனர். இதனால் கோவிலை சுற்றியுள்ள மாட வீதி, செங்கம் சாலை, சின்னக்கடை வீதி உள்ளிட்ட பகுதிகளில் அவ்வபோது போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போலீசார் உடனுக்குடன் போக்குவரத்தை சீர் செய்தனர்.

Tags:    

Similar News