உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

துபாயில் ஆயத்த ஆடை- ஜவுளி கண்காட்சிதிருப்பூர் ஏற்றுமதியாளர்கள் பங்கேற்க அழைப்பு

Published On 2023-06-26 04:06 GMT   |   Update On 2023-06-26 04:06 GMT
  • கண்காட்சியில் ஏற்றுமதியாளர்கள் பங்கேற்று பயனடைய ஏற்பாடுகளை செய்து வருகிறது.
  • செயற்கை நூலிழை ஆடை ஏற்றுமதியில் சிறப்பு கவனம் செலுத்தினால், இந்தியாவின் ஆயத்த ஆடை ஏற்றுமதி கணிசமாக உயரும்

திருப்பூர்:

சர்வதேச ஆயத்த ஆடை மற்றும் ஜவுளி கண்காட்சி ஐக்கிய அரபு நாடுகளின் துபாய் நகரில் உள்ள உலக வர்த்தக மைய வளாகத்தில் நடக்கிறது. வருகிற நவம்பர் 27-ந்தேதி தொடங்கி 3 நாட்கள் நடக்கும் கண்காட்சியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வர்த்தகர்கள், உற்பத்தியாளர்கள் பங்கேற்க உள்ளனர்.

இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதி வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஐக்கிய அரபு நாடுகளுடன் வர்த்தகத்தை மேம்படுத்த இந்த கண்காட்சி உதவுமென ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.,) தெரிவித்துள்ளது. கண்காட்சியில் ஏற்றுமதியாளர்கள் பங்கேற்று பயனடைய ஏற்பாடுகளை செய்து வருகிறது.

ஐக்கிய அரசு நாடுகளுடன் இந்தியா வர்த்தக உறவை வளர்க்க வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்தியுள்ளது. இனிவரும் ஆண்டுகளில் கூடுதல் வர்த்தகம் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2019ல் ஐக்கிய அரபு நாடுகளின் மொத்த ஆயத்த ஆடை இறக்குமதி 36 ஆயிரத்து 400 கோடி ரூபாயாக இருந்தது.கடந்த 2020ம் ஆண்டு 28 ஆயிரத்து 848 கோடி ரூபாய்க்கும், 2021ல் 50 ஆயிரத்து 405 கோடி ரூபாய்க்கும், பல்வேறு நாடுகளில் இருந்து அங்கு ஆடைகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவில் இருந்து 2019ல் 15 ஆயிரத்து 252 கோடி ரூபாய்க்கும், 2020ல் 12 ஆயிரத்து 423 கோடி ரூபாய்க்கும், 2021ல் 15 ஆயிரத்து 727 கோடி ரூபாய்க்கும், ஐக்கிய அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி நடந்துள்ளது.கடைசியாக 2021ல் ஐக்கிய அரபு நாடுகள் இறக்குமதி 80 சதவீதம் அதிகரித்துள்ளது. இருப்பினும் இந்தியாவின் பங்களிப்பு அதிக அளவு உயரவில்லை. செயற்கை நூலிழை ஆடை ஏற்றுமதியில் சிறப்பு கவனம் செலுத்தினால், இந்தியாவின் ஆயத்த ஆடை ஏற்றுமதி கணிசமாக உயரும் என்று ஏ.இ.பி.சி., தெரிவித்துள்ளது.திருப்பூர் ஏற்றுமதியாளர்களும், தொழில் முனைவோர்களும் துபாயில் நடக்கும் கண்காட்சியில் பங்கேற்று வாய்ப்புகளை குவிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News