உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

உள்நாட்டு வர்த்தகம் அதிகரிக்க வங்கதேச ஆடை இறக்குமதிக்கு தடை விதிக்கப்படுமா? உற்பத்தியாளர்கள் எதிர்பார்ப்பு

Published On 2022-12-21 04:17 GMT   |   Update On 2022-12-21 04:17 GMT
  • 2023 ஆம் ஆண்டும் மந்தமான வர்த்தகம் தான் இருக்கும் எனக் கணிக்கப்பட்ட நிலையில் இத்துறையில் பணிநீக்க அபாயங்கள் அதிகரித்துள்ளது.
  • 2023 ஆம் ஆண்டும் மந்தமான வர்த்தகம் தான் இருக்கும் எனக் கணிக்கப்பட்ட நிலையில் இத்துறையில் பணிநீக்க அபாயங்கள் அதிகரித்துள்ளது.

திருப்பூர்:

ரஷ்யா - உக்ரைன் போருக்குப் பின் உலக நாடுகளில் பணவீக்கம் அதிகரித்ததை தொடர்ந்து அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் பிற பெரிய பொருளாதார நாடுகளில் உள்ள மக்கள் ஆடைகளுக்காகச் செலவிடும் தொகையைப் பாதியாகக் குறைத்துள்ளதால் இந்தியாவின் 200 பில்லியன் டாலர் டெக்ஸ்டைல் மற்றும் ஆடைத் தொழில் மிகப்பெரிய நெருக்கடியில் சிக்கியுள்ளது.

கொரோனா தொற்றுக் காலத்தில் இருந்து அதிகப்படியான பாதிப்புகளை எதிர்கொண்டு வரும் டெக்ஸ்டைல் மற்றும் ஆடை துறை, கொரோனாவுக்குப் பின்பு வேகமாக வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பருத்தி விலை அதிகமாக இருந்த காரணத்தால் தொடர்ந்து மந்தமாகவே இருந்தது.பருத்தி விலை குறைந்த காலகட்டத்தில் ரஷ்யா - உக்ரைன் போர் இத்துறை வளர்ச்சியின் கழுத்தை நெரித்துள்ளது.

உலக நாடுகளின் பொருளாதாரம் ஒப்பீட்டளவில் இந்தியா வலுவாக உள்ளது, இதேபோல் டாப் 10 முக்கியப் பொருளாதார நாடுகளைக் காட்டிலும் இந்தியா சிறப்பாகச் செயல்படும் நிலையில் இந்திய டெக்ஸ்டைல் மற்றும் ஆடை துறை மட்டும் விதிவிளக்காக மாறியுள்ளது.

இந்திய ஜவுளித் துறை 2022 ஆண்டில் அதிகப்படியான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தகத்தை இழந்த நிலையில் 2023 ம் ஆண்டும் இது பெரும் பாதிப்பை ஏதிர்கொள்ளும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.

இந்திய டெக்ஸ்டைல் மற்றும் ஆடை துறையில் சுமார் 4.5 கோடிக்கும் அதிகமான மக்கள் பணிபுரியும் ஒரு தொழில்துறையாக விளங்குகிறது. 2023 ஆம் ஆண்டும் மந்தமான வர்த்தகம் தான் இருக்கும் எனக் கணிக்கப்பட்ட நிலையில் இத்துறையில் பணிநீக்க அபாயங்கள் அதிகரித்துள்ளது.

இந்திய டெக்ஸ்டைல் மற்றும் ஆடை துறையில் மொத்த வர்த்தகத்தில் சுமார் 22 சதவீதம் ஏற்றுமதி மட்டுமே பங்கு வகிக்கிறது.இத்துறை ஏற்றுமதி தொடர்ந்து 5மாதங்களுக்கு வீழ்ச்சியடைந்துள்ள. நவம்பர் மாதம் மட்டும் கடந்த ஆண்டை விடவும் சுமார் 15 சதவீதம் குறைந்து 3.1 பில்லியன் டாலராக குறைந்துள்ளது.

இந்தியாவின் பொருளாதாரம் ஒட்டுமொத்தமாக வலுவான வளர்ச்சி இருந்தபோதிலும் உள்நாட்டு விற்பனை மந்தமாக உள்ளது. இதற்கு முக்கியக் காரணம் அதிகப்படியான விலை மற்றும் மலிவான இறக்குமதி ஆடைகள் தான் என்று உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆடை விற்பனை அபரிமிதமான வளர்ச்சியைக் கண்ட நிலையில், உள்ளூர் டெக்ஸ்டைல் தொழிற்சாலைகள் உற்பத்தியைக் குறைக்கத் துவங்கியுள்ளது. இதற்கு முக்கியக் காரணம் உள்நாட்டில் அதிகப்படியான விலை, வெளிநாட்டு ஏற்றுமதி குறைப்பு ஆகியவை தான்.

உள்ளூர் டெக்ஸ்டைல் தொழிற்சாலைகள் உற்பத்தி ஜூலை-செப்டம்பர் காலாண்டில் 4.3 சதவீதம் குறைந்துள்ளது. இது கொள்கை வகுப்பாளர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் வேலைவாய்ப்புச் சந்தையில் நுழையும் கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க மத்திய மாநில அரசுகள் போராடி வரும் நிலையில் உற்பத்தி குறைக்கப்பட்டு உள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2022 ம் ஆண்டின் நடுப்பகுதி வரையிலான 18 மாத வலுவான வளர்ச்சிக்குப் பிறகு, உலகளாவிய ஆடைகளின் சில்லறை விற்பனை அதிகப்படியான பணவீக்கம் மற்றும் நுகர்வோரின் மோசமான மனநிலை காரணமாகச் சரிவுக்குக் கொண்டு வரப்பட்டு உள்ளது. மேலும் 2023 ம் ஆண்டுக்கான வளர்ச்சி வாய்ப்புகளும் மிகவும் மோசமாக உள்ளதாகவே தெரிகிறது என்று மெக்கின்சி அறிக்கை கடந்த மாதம் தெரிவித்தது. 

அமெரிக்கா, ஐரோப்பா, பிரிட்டன் போன்ற நாடுகளுக்கான ஜவுளி ஏற்றுமதியில் சீனாவுக்கு அடுத்த இடத்தில் வங்கதேசம் உள்ளது. சிறிய நாடாக இருந்தாலும் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகத்திற்கேற்ப கட்டமைப்பு வசதிகளை அந்நாட்டு அரசு செய்து கொடுத்துள்ளது.

இந்திய பின்னலாடை மற்றும் ஆயத்த ஆடை ஏற்றுமதியில் சீனா, வங்கதேசம், வியட்நாம் ஆகிய நாடுகள் போட்டியாக உள்ளன. தற்போதைய நிலையில் ஏற்றுமதி வர்த்தகத்தில் கடும் போட்டியை உருவாக்கியுள்ள வங்கதேசம், உள்நாட்டு வர்த்தகத்தில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் நம் நாட்டிற்கே பின்னலாடை ஏற்றுமதி செய்வது அதிகரித்துள்ளது.

கடந்த 2011ம் ஆண்டில் இந்தியா - வங்கதேசம் நாடுகளிடையே வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டதே, இத்தகைய இடர்பாடுகளுக்கு காரணமாக அமைந்துவிட்டது. ஒரே ஒப்பந்தத்தால் பருத்தி ஏற்றுமதியும் அதிகரித்து, ஆயத்த ஆடை இறக்குமதியும் உயர்ந்து உள்நாட்டு ஜவுளி உற்பத்தியாளர்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.

கடந்த 2021-22ம் ஆண்டின் ஜூலை முதல் நவம்பர் வரையிலான 5 மாதங்களில் வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்கான ஓவன் ஆடைகள் ஏற்றுமதி 1,430 கோடி ரூபாயாக இருந்தது. நடப்பு ஆண்டின் அதே 5 மாதங்களில் 2,044 கோடி ரூபாய் அளவுக்கு உயர்ந்துள்ளது.

அதேபோல் 2021-22ம் ஆண்டின் ஜூலை முதல் நவம்பர் வரையிலான 5 மாதங்களின் பின்னலாடைகள் ஏற்றுமதி 1,121 கோடி ரூபாயாக இருந்தது.இந்தாண்டு 1,751 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

வங்கதேசத்தின் இந்தியாவுக்கான ஒட்டுமொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதி 2021-22ன் 5 மாதங்களில் மட்டும் 2,551 கோடி ரூபாயாக இருந்தது. நடப்பு ஆண்டில், அதே ஐந்து மாதங்களில், 3,795 கோடி ரூபாயாக (48 சதவீதம் ) உயர்ந்துள்ளது. மத்திய அரசின் இத்தகைய கணக்கீட்டு புள்ளிவிவரம் திருப்பூரில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து திருப்பூர் தொழில்துறையினர் கூறியதாவது:-

கடந்த 2011ல் மத்திய அரசு ஏற்படுத்திய வரியில்லா வர்த்தக உடன்படிக்கையால் வங்கதேசம் நம் நாட்டுக்கே ஆயத்த ஆடை ஏற்றுமதி செய்கிறது. ஜி.எஸ்.டி., அமலுக்கு வந்த பிறகு ஆயத்த ஆடை இறக்குமதி அதிகரித்துள்ளது. மத்திய அரசு உடனடியாக மாற்று வரிவிதிப்பு வாயிலாக வங்கதேசத்தில் இருந்து ஆயத்த ஆடை இறக்குமதியாவதை தடுக்க வேண்டும்.

ஏற்றுமதி வர்த்தகத்தில் உள்ள போட்டியை சமாளிக்க, மத்திய அரசு சில சலுகைகளை வழங்கி வருகிறது. ஆனால், வங்கதேச இறக்குமதியால் உள்நாட்டு பனியன் ஆடை வர்த்தகம் கேள்விக்குறியாக மாறியுள்ளது. இனியும் மத்திய, மாநில அரசுகள் காலம்கடத்தாமல் உரிய முன்னேற்பாடுகள் வாயிலாக உள்நாட்டு ஆயத்த ஆடை மற்றும் பின்னலாடை வர்த்தகத்தை பாதுகாக்க வேண்டும்.தொழில் அமைப்புகளும் பாதிப்புகளை உணர்ந்து, கூட்டுக்கமிட்டி அமைத்து மத்திய, மாநில அரசுகளிடம் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர். 

Tags:    

Similar News