பைக், நகை திருடிய 3 வாலிபர்கள் கைது
- 7 பவுன் நகைகள், 1 பைக் பறிமுதல்
- சிறையில் அடைத்தனர்
வாணியம்பாடி:
வாணியம்பாடி அடுத்த கோணாமேடு அருகே டவுன் போலீசார் இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்களை மடக்கி பிடித்த விசாரணை நடத்தினர்.
3 பேரும் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர். சந்தேகமடைந்த போலீசார் வாலிபர்களை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.
அவர்கள் மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் (வயது 24) சிக்கனாங்குப்பம் பகுதியை சேர்ந்த காமேஷ் (23), வினோத் (26) என்பதும், 3 பேரும் சேர்ந்து வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருசக்கர வாகனம் திருட்டு, வீடுகளில் புகுந்து நகை திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததும் கண்டறியப்பட்டது.
மேலும் அவர்களிடமிருந்து 7 பவுன் தங்க நகைகள் மற்றும் 1 பைக் பறிமுதல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.