சலூன் கடைக்கு வந்த பெண்ணை ஆபாச படம் எடுத்த வாலிபர்
எடப்பாடி:
எடப்பாடி நகராட்சிக்கு உட்பட்ட கவுண்டம்பட்டி, காட்டு வளவு பகுதியை சேர்ந்தவர் ஜோதிகா (22), இவரது கணவர் சக்கரவர்த்தி, நூற்பாலையில் கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வரும் இத் தம்பதிகளுக்கு ஒரு ஆண் ஒரு பெண் என இரு குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் ஜோதிகா தனது மகனுக்கு முடி திருத்தம் செய்வதற்காக எடப்பாடி அங்காளம்மன் கோவில் தெரு பகுதியில் உள்ள ஒரு சலூன் கடைக்கு அழைத்துச் சென்றார். அங்கு நாற்காலியில் ஜோதிகாவின் குழந்தையை அமர வைத்த சலூன் கடைக்காரர் முடி திருத்தம் செய்து கொண்டிருந்த போது, குழந்தையின் தலையை ஜோதிகா ஆடாமல் பிடித்துக் கொண்டு இருந்தார்.
அப்போது எடப்பாடி அடுத்த தேவனா கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் ஜோதிகாவின் அருகே அமர்ந்து, அவரை ஆபாசமாக தனது செல்போனில் படம் எடுத்ததாக கூறப்படுகிறது. இதனை தட்டிக்கேட்ட ஜோதிகாவிடம் அந்த வாலிபர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதுகுறித்து ஜோதிகா எடப்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் சம்பந்தப்பட்ட வாலிபரை காவல் நிலையம் அழைத்து வந்த போலீசார் அவரது செல்போனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் சம்பந்தப்பட்ட சலூன் கடைக்காரரிடமும் விசாரணை நடத்தப்படுகிறது.