தமிழகத்தில் பின்தங்கிய பகுதிகளிலும் தொழிற்பேட்டைகள் தொடங்கப்படும்- தா.மோ.அன்பரசன் தகவல்
- 1959-ம் தொடங்கப்பட்ட சங்கம் நான்கு ஆண்டுகளாக உறுப்பினர் வயது மூப்பின் காரணமாக செயல்படாமல் இருக்கிறது.
- புதிதாக உறுப்பினர்களை சேர்த்து சங்கத்தை மேம்படுத்தி செயல்படுத்தப்படும் என்பதால் புதிய சங்கம் அமைக்க அவசியமில்லை.
சென்னை:
தமிழகத்தில் பின்தங்கியுள்ள பகுதிகளில் வேலைவாய்ப்பை உருவாக்கும் விதமாக தொழிற்பேட்டைகளை அரசு தொடங்கும் என சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.
சட்டபேரவையில் கேள்வி நேரத்தின் போது, நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் தேன்மொழி, நிலக்கோட்டை பகுதியில் பித்தளைப் பாத்திர தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கம் அமைக்க முன்வருமா என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் தா.மோ.அன்பரசன், 1959-ம் தொடங்கப்பட்ட சங்கம் நான்கு ஆண்டுகளாக உறுப்பினர் வயது மூப்பின் காரணமாக செயல்படாமல் இருக்கிறது என்றும், புதிதாக உறுப்பினர்களை சேர்த்து சங்கத்தை மேம்படுத்தி செயல்படுத்தப்படும் என்பதால் புதிய சங்கம் அமைக்க அவசியமில்லை என்றும் தெரிவித்தார்.
இதே போல, தமிழகத்தின் பின்தங்கிய பகுதிகளில் வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையி்ல் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மூலமாக தொழிற்பேட்டைகளை அரசு அமைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.