உள்ளூர் செய்திகள்

கொள்ளையர்கள் துரத்தியதில் இளம்பெண் படுகாயம்

Published On 2022-06-28 10:02 GMT   |   Update On 2022-06-28 10:02 GMT
  • மொபட்டில் சென்றபோது நகை பறிக்க முயற்சி:
  • போலீஸ் கமிஷனர் நேரில் ஆறுதல்

கோவை :

கோவைப்புதூர் குளத்துபாளையம் மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் ஸ்ரீகுமார். இவரது மனைவி தங்கமணி (வயது 35). இவர் நேற்று இரவு மொபட்டில் கோவைப்புதூர் அடுக்குமாடி குடியிருப்பு அருகே சென்று கொண்டிருந்தார்.

அப்போது பின்னால் மோட்டார் சைக்கிள் துரத்திய 2 வாலிபர்கள் தங்கமணியின் கழுத்தில் இருந்த செயினை பறித்து தப்பிச் செல்ல முயன்றனர். இதில் நகையை பறிக்க விடாமல் கைகளில் பிடித்தவாறு நிலைதடுமாறி தங்கமணி கீழே விழுந்ததில் கழுத்து உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டது.

அந்த வழியாக சென்றவர்கள தங்கமணியை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து புகாரின் பேரில் குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அதில், தங்கமணி அணிந்திருந்தது கவரிங் செயின் என்பதும் அது தெரியாமல் தங்கம் என நினைத்து வாலிபர்கள் பறிக்க முயன்றதும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து போலீசார் நகை பறிக்க முயன்ற வாலிபர் ஒருவரை பிடித்து விசாரித்து வருகின்றனர். மற்றொருவரை தேடி வருகின்றனர். நகை பறிக்க முயன்றதில் பெண் கீழே விழுந்து காயமடைந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் நகை பறிப்பில் காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் தங்கமணியை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் இன்று காலை நேரில் சென்று நலம் விசாரித்தார். அவரிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

Tags:    

Similar News