உள்ளூர் செய்திகள்

சிதம்பரம் அருகே புதுவை மாநில மது பாட்டில்களை பதுக்கிய வி.சி.க. நிர்வாகி தலைமறைவு

Published On 2023-04-14 09:50 GMT   |   Update On 2023-04-14 09:50 GMT
  • விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய துணைச் செயலாளர் வீட்டில் பெட்டி பெட்டியாக விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த புதுவை மாநில 1726 மது பாட்டில்கள் மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.
  • வி.சி.க. பிரமுகர் மீது வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

சிதம்பரம்:

சிதம்பரம் அருகே கரிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. விடுதலை சிறுத்தை கட்சி ஒன்றிய துணைச் செயலாளராக உள்ளார். தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ள புதுவை மாநில மதுபான பாட்டில்களை இவர் பரங்கிப்பேட்டை பகுதியில் விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது,

அதன்படி நேற்று நள்ளிரவு நேரத்தில் கரிக்குப்பம் கிராமத்திற்கு சென்ற போலீசார், வி.சி.க. நிர்வாகி சத்தியமூர்த்தி வீட்டில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது 36 பெட்டிகளில் சுமார் ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள 1726 மது பாட்டில்கள் பதுக்கிவைக்கப்பட்டிருந்ததை போலீசார் கண்டனர். இவை அனைத்தும் புதுவையில் கடத்தி வரப்பட்ட மது பாட்டில்கள் என போலீசாருக்கு தெரிய வந்தது. உடனடியாக மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், இதனை கடத்தி வர பயன்படுத்தபட்ட காரையும் பறிமுதல் செய்தனர்.

இது குறித்து கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆர்ராஜாராம், சிதம்பரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஆர்.ரகுபதி ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். புதுவையில் இருந்து மது பாட்டில்கள் கடத்தி வரப்பட்டு விற்பனைக்காக வைத்திருந்த விடுதலை சிறுத்தை கட்சி ஒன்றிய துணை செயலாளர் சத்யமூர்த்தி மீது 2 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். மேலும், தப்பியோடிய சத்தியமூர்த்தியை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News