போதைப்பொருள் விற்பவர்கள் குறித்து தகவல் தெரிவித்தால் சன்மானம்- போலீசார் அறிவிப்பு
- போதைப் பொருட்கள் உட்கொண்டால் உடல்நிலை சீர்கெடுவது மட்டுமின்றி ஆயுள் காலம் குறைவதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
- மாணவர்கள் போதைப் பொருட்கள் பழக்கத்துக்கு ஆளாக கூடாது.
ஊத்துக்கோட்டை:
ஊத்துக்கோட்டையில் உள்ள அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருட்கள் உட்கொண்டால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் தமிழ்ச் செல்வம் தலைமை தாங்கினார். சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகேசன், பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இன்ஸ்பெக்டர் ஏழுமலை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.
கஞ்சா, புகையிலை போன்ற போதைப் பொருட்கள் உட்கொண்டால் உடல்நிலை சீர்கெடுவது மட்டுமின்றி ஆயுள் காலம் குறைவதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
எனவே மாணவர்கள் போதைப் பொருட்கள் பழக்கத்துக்கு ஆளாக கூடாது. படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். யாராவது கஞ்சா போன்ற போன்ற போதைப் பொருட்களை விற்பனை செய்தால் 9444005105 செல்போன் எண்ணுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். தகவல் தெரிவிப்போரின் பெயர் ரகசியமாக வைக்கப்படும். மேலும் தகவல் தெரிவிப்போருக்கு தக்க சன்மானம் வழங்கப்படும்.
இவ்வாறு இன்ஸ்பெக்டர் ஏழுமலை தெரிவித்தார்.