திருடச்சென்ற வீட்டில் நகை-பணம் இல்லாததால் மூதாட்டியை அடித்து உதைத்த கொள்ளையன்
- பீரோவில் விலை உயர்ந்த பொருட்கள் மற்றும் நகை-பணம் இல்லை.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஊத்துக்கோட்டை:
ஊத்துக்கோட்டை அருகே உள்ள பனப்பாக்கம், நெட்டித்தெருவை சேர்ந்தவர் சரோஜம்மாள் (வயது75). கணவரை இழந்த அவர் வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.
சம்பவத்தன்று இரவு சரோஜா வழக்கம்போல் தூங்கினார். இரவு காற்றுக்காக கதவை திறந்து வைத்து இருந்தார். நள்ளிரவில் வீட்டுக்குள் நைசாக புகுந்து கொள்ளையன் ஒருவன் அங்குள்ள பீரோவை திறந்து நகை பணத்தை தேடினான்.
ஆனால் பீரோவில் விலை உயர்ந்த பொருட்கள் மற்றும் நகை-பணம் இல்லை. எனினும் அவன் அங்கிருந்த பொருட்களில் எங்காவது மறைத்து வைத்து இருக்கலாம் என்று நினைத்து தொடர்ந்து தேடுதலில் ஈடுபட்டான்.
இதற்கிடையே பொருட்கள் உருளும் சத்தம் கேட்டு எழுந்த மூதாட்டி சரோஜம்மாள், வீட்டுக்குள் கொள்ளையன் நிற்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் கொள்ளையனை கண்டதும் கூச்சலிட்டார். ஏற்கனவே கொள்ளையடிக்க விலை உயர்ந்த பொருட்கள் நகை-பணம் இல்லாததால் கொள்ளையன் கடும் கோபத்தில் இருந்தான். ஆத்திரம் அடைந்த அவன் மூதாட்டி சரோஜம்மாளை கத்தியை காட்டி மிரட்டினான். மேலும் கத்தக்கூடாது என்று கூறி சரோஜம்மாளை தாக்கினான். நகை, பணத்தை கொடுக்குமாறும் மிரட்டினான். ஆனால் சரோஜாம்மாள் தன்னிடம் நகை-பணம் எதுவும் இல்லை என்று தெரிவித்தார். இதனால் கோபம் அடைந்த கொள்ளையன் 'எனது நேரத்தை வீணடித்து விட்டாய்' என்று கூறி சரோஜம்மாளின் முகத்தில் குத்தினான். மேலும் எச்சிலையும் துப்பியதாக தெரிகிறது.
இதில் நிலைகுலைந்த சரோஜம்மாள் வலியால் துடித்தார். எனினும் வெறும் கையுடன் போக விரும்பாத கொள்ளையன் சரோஜம்மாள் விரலில் அணிந்து இருந்த சிறிய மோதிரத்தை கழற்ற முயன்றான்.
ஆனால் அந்த மோதிரம் இறுகலாக இருந்ததால் அதுவும் வரவில்லை. இதனால் மூதாட்டி சரோஜம்மாள் வலியால் அலறி துடித்தார். ஆத்திரத்தின் உச்சம் அடைந்த கொள்ளையன் மோதிரத்தை பறிக்கும் முயற்சியையும் கைவிட்டு மீண்டும் சரோஜம்மாளை தாக்கிவிட்டு அங்கிருந்து ஏமாற்றத்துடன் தப்பி சென்றுவிட்டான். நீண்ட நேரத்துக்கு பின்னர் சரோஜம்மாளின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து விசாரித்தனர். அப்போது தான் கொள்ளையன் புகுந்து அவரை தாக்கி இருப்பது தெரிந்தது. பலத்த காயம் அடைந்த சரோஜம்மாளுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து ஊத்துக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.