உள்ளூர் செய்திகள்

தொழிலாளியை ஓட ஓட விரட்டி வெட்டிக் கொன்ற வாலிபர்- அரிவாளுடன் போலீசில் சரண் அடைந்தார்

Published On 2023-11-04 06:42 GMT   |   Update On 2023-11-04 06:42 GMT
  • பட்டபகலில் நடந்த இந்த கொலை சம்பவம் போடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
  • அரிவாளுடன் போடி டவுன் போலீஸ் நிலையத்தில் சிவமூர்த்தி சரண் அடைந்தார்.

மேலசொக்கநாதபுரம்:

தேனி மாவட்டம் போடி அருகில் உள்ள குப்பிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (வயது38). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக அவரை வீட்டை விட்டு விரட்டி விட்டார்.

இதனையடுத்து அவர் பழனிசெட்டிபட்டியில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். இதனிடையே ராஜேஷ்குமார் வேறு ஒருவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்ததாக தெரிகிறது. இதனால் அவரது மைத்துனர் சிவமூர்த்தி (30) என்பவர் அங்கு சென்று எனது அக்காவை விரட்டி விட்டு வேறு ஒருவருடன் வாழ்கிறாயா என சத்தம் போட்டுள்ளார். இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

நேற்று சிவமூர்த்தியின் வீட்டுக்கு ராஜேஷ்குமார் சென்றார். அங்கு சிவமூர்த்தி இல்லாததால் அவரது மனைவியிடம் இனிமேல் எனது பிரச்சினையில் உன் கணவர் தலையிடக்கூடாது என சத்தம்போட்டு வந்துள்ளார்.

வீட்டிற்கு வந்து தனது மனைவியிடம் சத்தம்போட்டதால் ஆத்திரம் அடைந்த சிவமூர்த்தி இன்று போடி அரசு உதவி பெறும் பள்ளி அருகே நடந்து சென்று கொண்டிருந்த ராஜேஷ்குமாரை வழிமறித்து சத்தம் போட்டார். மேலும் அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றவே தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ராஜேஷ்குமாரை வெட்டினார். உயிருக்கு பயந்து அவர் ஓட முயன்றபோதும் விடாமல் துரத்தி சென்ற சிவமூர்த்தி சரமாரியாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் ராஜேஷ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதை பார்த்ததும் அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அலறியடித்து ஓட்டம் பிடிக்க தொடங்கினர்.

பின்னர் ரத்தம் சொட்ட சொட்ட அரிவாளுடன் போடி டவுன் போலீஸ் நிலையத்தில் சிவமூர்த்தி சரண் அடைந்தார். அவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்டபகலில் நடந்த இந்த கொலை சம்பவம் போடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News