புழல் ஜெயிலில் கைதிகளிடம் செல்போன்கள் பறிமுதல்
- சிறையில் கைதிகளுக்கு செல்போன்கள், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் சர்வ சாதாரணமாக கிடைப்பதாக ஏற்கனவே குற்றச்சாட்டு உள்ளது.
- ஆண்கள் சிறையில் விசாரணை கைதிகளாக உள்ள பரத் , விஷ்வா ஆகியோர் செல்போன் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.
செங்குன்றம்:
சென்னை புழல், ஜெயிலில் விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள் மற்றும் பெண்கள் சிறையில் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர்.
சிறையில் கைதிகளுக்கு செல்போன்கள், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் சர்வ சாதாரணமாக கிடைப்பதாக ஏற்கனவே குற்றச்சாட்டு உள்ளது.
அதிகாரிகள் அவ்வப்போது ஜெயிலில் சோதனை நடத்தி செல்போன்களை பறிமுதல் செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் புழல் சிறையில் பெண் கைதிகள், ஆண் கைதிகள் செல்போன் பயன்படுத்துவதாக சிறைத் துறை கண்காணிப்பாளர் தர்மராஜூக்கு தகவல் கிடைத்தது.
அவரது உத்தரவுப்படி நேற்று இரவு பெண்கள் சிறையிலும், ஆண்கள் சிறையிலும் அதிகாரிகள் திடீர் சோதனை செய்தனர்.
இதில் கஞ்சா கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட கொடுங்கையூரை சேர்ந்த தாரணி என்ற பெண்ணிடம் செல்போன் இருப்பது தெரிய வந்தது.
இதேபோல் ஆண்கள் சிறையில் விசாரணை கைதிகளாக உள்ள பரத் , விஷ்வா ஆகியோர் செல்போன் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடம் இருந்து 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து புழல் போலீசில் புகார் செய்யப்பட்டது.போலீசார் வழக்கு பதிவு செய்து கைதிகளுக்கு செல்போன் எப்படி கிடைத்தது. அவர்கள் யார்? யாரிடம் பேசினார்கள்? ஜெயில் ஊழியர்கள் உடந்தையாக இருந்தனரா? என்று பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகிறார்கள்.