உள்ளூர் செய்திகள்

4 பேருடன் குடும்பம் நடத்திய இளம்பெண்- நடிகர் வடிவேலு சினிமா பாணியில் போலீஸ் நிலையத்தில் பஞ்சாயத்து

Published On 2022-10-06 06:02 GMT   |   Update On 2022-10-06 06:02 GMT
  • ஏமாந்து போன 4 பேரின் மனைவிகளும் எங்கள் நகைகள், பணம் கிடைத்தால் போதும்.
  • அவளிடம் இருந்து என்னுடைய கணவரை மீட்டுத் தாருங்கள் எனக் கூறினார்கள்.

ஆம்பூர்:

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் 4 பேரை கணவராக ஏற்று குடும்பம் நடத்தி வந்துள்ளார்.

ஆம்பூர் கஸ்பா பகுதியைச் சேர்ந்த வசதி படைத்த ஒருவர் மற்றும் கருப்பூர் பகுதி சேர்ந்த 2 டிரைவர்கள் மற்றும் ஆம்பூரை சேர்ந்த ஒரு டிரைவர் என 4 பேருடன் அடுத்தடுத்து குடும்பம் நடத்தி உள்ளார்.

நேற்று கருப்பூர் பகுதியை சேர்ந்த டிரைவர் ஒருவரின் மனைவி 2 குழந்தைகளுடன் ஆம்பூர் டவுன் போலீஸ் நிலையத்திற்கு வந்தார்.

அவர் தனது கணவர் வீட்டுக்கு வருவதில்லை. வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருக்கிறார். அந்த பெண்ணிடம் இருந்து கணவரை மீட்டு தாருங்கள் என புகார் அளித்தார். போலீசார் அவரது கணவருடன் தொடர்பில் இருந்த பெண்ணை செல்போனில் தொடர்பு கொண்டு போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து விசாரணை நடத்தினர்.

அப்போதுதான் அந்தப் பெண் ஏற்கனவே 3 பேருடன் நடிகர் வடிவேலு நடித்த சினிமா பாணியில் குடும்ப நடத்தியது தெரிய வந்தது.

இதை தொடர்ந்து போலீசார் அந்த பெண்ணின் 3 முன்னாள் தற்காலிக கணவர்களை போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்தனர்.

அவர்களுடன் அவர்களது மனைவிகளும் வந்தனர். தங்களது கணவர்கள் சரிவர வீட்டுக்கு வருவதில்லை. எங்களுடைய நகைகள் மற்றும் வீட்டில் இருந்த பணத்தையும் அந்த பெண் அபகரித்துள்ளார் என்று பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறினார்கள். போலீசார் அவர்களை சமாதானம் செய்தனர்.

இது ஒருபுறம் இருக்க இளம்பெண்ணுடன் குடும்பம் நடத்திய 4 பேரும் எதுவும் தெரியாதது போல் அமைதியாக நின்று கொண்டிருந்தனர்.

அப்போது போலீசார் இளம்பெண்ணுடன் தொடர்பில் இருந்த 2 பேர் ஊர் உமாராபாத் அருகே உள்ளது. ஆகவே 2 பேர் உமாராபாத் போலீஸ் நிலையத்திலும் மற்றும் 2 பேர் இங்கேயும் புகார் தாருங்கள் என கூறினார்கள்.

அப்போது ஏமாந்து போன 4 பேரின் மனைவிகளும் எங்கள் நகைகள், பணம் கிடைத்தால் போதும். அவளிடம் இருந்து என்னுடைய கணவரை மீட்டுத் தாருங்கள் எனக் கூறினார்கள். தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனாலும் இந்த பிரச்சனைக்கு போலீசாரால் தீர்வு காண முடியவில்லை. பல மணி நேரம் இந்த பேச்சுவார்த்தை நீடித்தது. ஒரு கட்டத்தில் 4 பேருடன் குடும்பம் நடத்திய இளம்பெண் நகைகளை 4 மாதத்தில் திருப்பித் தருவதாக கூறினார்.

இதைதொடர்ந்து போலீசார் அவரை அனுப்பினர். அவர் தனது தாயுடன் சென்று விட்டார்.

அவருடன் குடும்பம் நடத்திய 4 பேரையும் அவர்களது மனைவிகள் நன்கு கவனிப்பது போல் முறைத்து பார்த்தபடி வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவத்தால் ஆம்பூர் டவுன் போலீஸ் நிலையத்தில் சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News