உள்ளூர் செய்திகள்

குடோனில் பதுக்கி வைக்கப்பட்ட ஒரு டன் போதை பொருட்கள் சிக்கியது- 2 பேரை கைது செய்து போலீசார் விசாரணை

Published On 2022-12-22 09:39 GMT   |   Update On 2022-12-22 09:39 GMT
  • சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து வேல்முருகன் மற்றும் சரக்கு வாகனத்தின் டிரைவர் தங்கராஜ் (58) ஆகியோரை கைது செய்தனர்.
  • கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம், ஒரு டன் போதைப்பொருட்கள் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

சிவகிரி:

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அடுத்த சிவகிரி இளங்கோ தெருவை சேர்ந்தவர் வேல்முருகன் (47). இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார்.

இவருக்கு சொந்தமான குடோன் பாட்டேல் தெருவில் உள்ளது. இந்த குடோனில் ஓசூரில் இருந்து போதை பொருட்கள் (குட்கா) கடத்தி வந்து பதுக்கி வைத்திருப்பதாக திட்டமிட்ட குற்ற நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் இன்று அதிகாலை சிவகிரி பட்டேல் தெருவில் உள்ள வேல்முருகனுக்கு சொந்தமான குடோனுக்கு பெருந்துறை உதவி கண்காணிப்பாளர் கவுதம் கோயல் தலைமையிலான போலீசார் நேரடியாக சென்று ஆய்வு செய்தனர்.

அப்போது குடோனில் வெங்காய லோடு, அரிசி மூட்டை இடையில் சுமார் ஒரு டன் (ஆயிரம் கிலோ) எடையுள்ள குட்கா மற்றும் போதை பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சடைந்தனர்.

மேலும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த சரக்கு வாகனத்திலும் போதை பொருட்கள் மூட்டை, மூட்டையாக இருந்தது.

இது குறித்து சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து வேல்முருகன் மற்றும் சரக்கு வாகனத்தின் டிரைவர் தங்கராஜ் (58) ஆகியோரை கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம், ஒரு டன் போதைப்பொருட்கள் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் ஓசூரில் இருந்து போதை பொருட்களை வாங்கி வந்து பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. மேலும் இதன் பின்னணியில் வேறு யாரும் உள்ளார்களா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News