உள்ளூர் செய்திகள்

திருமங்கலம் ஆட்டுச்சந்தையில் குவிந்த வியாபாரிகள் கூட்டம்.


திருமங்கலம் ஆட்டுச்சந்தையில் குவிந்த வியாபாரிகள்

Published On 2022-07-01 07:33 GMT   |   Update On 2022-07-01 07:33 GMT
  • பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இன்று ஆட்டுச்சந்தை நடந்தது.
  • அதிகாலை 4 மணிக்கு தொடங்கிய ஆட்டு சந்தையில் வழக்கத்தைவிட அதிகளவு கூட்டம் காணப்பட்டது. 10,000 முதல் 20,000 ஆடுகள் வரை விற்கப்பட்டது.

திருமங்கலம்:

மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். தமிழகத்தில் பொள்ளாச்சிக்கு அடுத்த பெரிய சந்தையாக கருதப்படும் இந்த ஆட்டுசந்தையில் ஒவ்வொரு வாரமும் 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரையிலான ஆடுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தென்மாவட்டத்தில் மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, கோவில்பட்டி, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து இங்கு வியாபாரிகள் ஆடுகள், கோழிகளை வாங்கிச் செல்வது வழக்கம். அதிகாலை 4 மணியிலிருந்து 9 மணி வரை கட்டுக்கடங்காத கூட்டம் காணப்படும்.

இந்நிலையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இன்று ஆட்டுச்சந்தை நடந்தது. அதிகாலை 4 மணிக்கு தொடங்கிய ஆட்டு சந்தையில் வழக்கத்தைவிட அதிகளவு கூட்டம் காணப்பட்டது. 10,000 முதல் 20,000 ஆடுகள் வரை விற்கப்பட்டது.

வருகிற 10-ந் தேதி பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இந்த வார வெள்ளிக்கிழமை ஆட்டுச் சந்தையில் ரூ. 5 ஆயிரம் வரை விலை அதிகரித்து 15 முதல் 25 ஆயிரம் ரூபாய்க்கு மேல்தான் விற்கப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இன்று நடந்த ஆட்டுச்சந்தையில் ரூ.1 கோடி ரூபாய்க்கு மேல் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News