திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடும் பனிமூட்டம்
- ரெயில் பாதையில் கடும் பனிப்பொழிவு காணப்பட்டதால் சென்னை மார்க்கத்தில் சென்ற அனைத்து ரெயில்களும் தாமதமாக சென்றன.
- மின்சார ரெயில்கள் மெதுவாக இயக்கப்பட்டது. இதனால் ரெயில்கள் குறிப்பிட்ட நேரத்தில் செல்வதில் தாமதம் ஏற்பட்டது.
திருவள்ளூர்:
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்தம் காரணமாக சென்னை மற்றும் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் பலத்த மழை கொட்டியது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மழை இல்லை. ஆனால் வழக்கத்துக்கு மாறாக அதிகாலை நேரத்தில் கடும் பனி மூட்டம் நிலவுகிறது.
திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று காலை கடும் பனிமூட்டம் நிலவியது. இதனால் சாலைகளே தெரியாத அளவுக்கு புகைபோல் காணப்பட்டது. காலை 8 மணிக்கு பின்னரே பனி மூட்டம் மெல்லமெல்ல விலக தொடங்கியது.
திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று கடும் பனி மூட்டம் காணப்பட்டது. சாலைகள் தெரியாத அளவுக்கு பனி இருந்தது. இதனால் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு மெதுவாக சென்றன.
ரெயில் பாதையில் கடும் பனிப்பொழிவு காணப்பட்டதால் சென்னை மார்க்கத்தில் சென்ற அனைத்து ரெயில்களும் தாமதமாக சென்றன. மின்சார ரெயில்கள் மெதுவாக இயக்கப்பட்டது. இதனால் ரெயில்கள் குறிப்பிட்ட நேரத்தில் செல்வதில் தாமதம் ஏற்பட்டது.
சென்னை- அரக்கோணம் மார்க்கத்தில் இயக்கப்பட்ட புறநகர் ரெயில்கள் பனிப்பொழிவு காரணமாக மெதுவாக சென்றன. இதனால் ரெயில் தாமதமாக சென்றதால் பயணிகள் அவதி அடைந்தனர்.
சென்னை சென்ட்ரலில் இருந்து ஓசூர் நோக்கிச் சென்ற அதிவேக விரைவு ரெயில், வந்தே பாரத் ரெயிலும் தாமதமாக சென்றது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பனிமூட்டம் அதிக அளவில் இருந்தது.
காஞ்சிபுரத்தில் மூங்கில் மண்டபம், காமராஜர் சாலை, பஸ் நிலையம், கங்கை கொண்டான் மண்டபம், கீழம்பி சாலை, பொன்னேரிக்கரை சாலை பகுதிகளில் காலை வரை பனி நிறைந்து காணப்பட்டது. வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு மெதுவாக சென்றனர்.
பலத்த மழை பெய்யும் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில் தற்போது கடும் பனி மூட்டம் நிலவி வருவது பொதுமக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.