உள்ளூர் செய்திகள்

ஆற்காடு அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த கணவன்-மனைவி மின்சாரம் தாக்கி பலி

Published On 2022-10-01 04:36 GMT   |   Update On 2022-10-01 04:36 GMT
  • விரைந்து வந்த போலீசார் இருவரின் உடலை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
  • ஆற்காடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆற்காடு:

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த பெரிய குக்குண்டி கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 48). விவசாயி. இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு 2 மகள், ஒரு மகன் உள்ளனர். மகள்களுக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர்.

தம்பதிக்கு சொந்தமாக விவசாய நிலம் வீட்டின் அருகே உள்ளது. நிலத்திற்கு செல்வதற்காக இன்று காலை சுமார் 7 மணி அளவில் சரவணன் நடந்து சென்றார். வயல்வெளியில் மின் கம்பி அறுந்து விழுந்து கிடந்தது.

அதில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தது.

இதனை அறியாமல் சரவணன் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்தார். அப்போது மின்சாரம் தாக்கி தூக்கி எறியப்பட்டு சம்பவ இடத்திலேயே சரவணன் பரிதாபமாக இறந்தார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு சாந்தி நிலத்திற்கு ஓடி வந்தார். அப்போது சரவணன் மீது மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தது தெரியாமல் அவரை தூக்க முயன்றார். இதில் சாந்தி மீதும் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

இதனைக் கண்ட பொதுமக்கள் போலீசாருக்கும், மின்சார துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

விரைந்து வந்த போலீசார் இருவரின் உடலை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இது சம்பந்தமாக ஆற்காடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மின்சாரம் தாக்கி தம்பதி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News