உள்ளூர் செய்திகள்

தாளவாடி பகுதியில் கிலோ ரூ.2-க்கு விற்பதால் முட்டை கோஸ்களை கால்நடைகளுக்கு தீவனமாக போடும் விவசாயிகள்

Published On 2022-12-25 04:21 GMT   |   Update On 2022-12-25 04:21 GMT
  • முட்டைகோஸ்களை வாங்க வரும் வியாபாரிகள் ஒரு கிலோ முட்டைகோஸ் ரூ.2 முதல் ரூ.3 வரை மட்டுமே விலை கொடுப்பதால் விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர்.
  • முட்டை கோசை அறுவடை செய்யாமல் செடியிலேயே விட்டு விட்டனர். ஒரு சில இடங்களில் முட்டை கோஸ்களை கால்நடைகளுக்கு தீவனமாக கொடுத்து வருகின்றனர்.

தாளவாடி:

ஈரோடு மாவட்டத்தில் தாளவாடி, கொங்கள்ளி, பனகஹள்ளி, தொட்டகாஜனூர் பாரதி நகர், கெட்டவாடி, தலமலை, அருள்வாடி போன்ற 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கத்திரி, வெண்டை, தக்காளி, பீட்ரூட், சிவப்பு முள்ளங்கி, முட்டைகோஸ், காலிபிளவர், பீன்ஸ் ஆகிய பயிர்களை பயிரிட்டு உள்ளனர்.

இப்பகுதியில் சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் முட்டைகோஸ் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது முட்டை கோஸ் அறுவடைக்கு தயாராக உள்ளது. முட்டைகோஸ்களை வாங்க வரும் வியாபாரிகள் ஒரு கிலோ முட்டைகோஸ் ரூ.2 முதல் ரூ.3 வரை மட்டுமே விலை கொடுப்பதால் விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர்.

இதனால் முட்டை கோசை அறுவடை செய்யாமல் செடியிலேயே விட்டு விட்டனர். ஒரு சில இடங்களில் முட்டை கோஸ்களை கால்நடைகளுக்கு தீவனமாக கொடுத்து வருகின்றனர்.

தாளவாடி பகுதியில் சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் முட்டைகோஸ்களை பயிரிட்டு உள்ளோம். 3 மாத பயிரான முட்டைகோஸ் பயிரிட ஒரு ஏக்கருக்கு ரூ.80 ஆயிரம் வரை செலவாகிறது. இந்த முறை தண்ணீர் பற்றாக்குறை இல்லை என்பதால் பயிரிட்ட முட்டைகோஸ் நன்கு விளைந்து உள்ளது. தற்போது அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் வியாபாரிகள் கிலோ ரூ.2 முதல் ரூ.3 வரை மட்டுமே கேட்கின்றனர். ஆனால் தற்போது வெளிமார்க்கெட்டில் கிலோ ரூ.20-க்கு விற்கப்பட்டு வருகிறது.

குறைந்தபட்சம் ரூ.10-க்கு விற்றால் தான் எங்களுக்கு கட்டுபடியாகும். விளைச்சல் அதிகம் என காரணம் கூறி எங்களிடம் வியாபாரிகள் குறைந்த விலைக்கு கேட்பதால் நாங்கள் அறுவடை செய்யாமல் முட்டைகோஸ்களை செடியிலேயே விட்டு விட்டோம். சில இடங்களில் கால்நடைகளுக்கு தீவனமாக போட்டு வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

Similar News