பெசன்ட் நகரில் இருந்து காரில் சென்ற வாலிபரை கடத்திய மர்ம கும்பல்
- காரில் இருந்த அனிதாவை கீழே இறக்கிவிட்டு விட்டு உமேஷ் குமாரை காரில் கடத்திச் சென்றனர்.
- அனிதா தனது கணவரை கடத்திச் சென்று விட்டதாக வெள்ளவேடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
திருவள்ளூர் அடுத்த ஸ்ரீதேவி குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் உமேஷ் தாஸ் (27), இவரது மனைவி அனிதா (23) இவர் நேற்று சென்னை பெசன்ட் நகரில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு மனைவியுடன் சென்று இருந்தார்.
இன்று காலை பெசன்ட் நகரில் இருந்து புறப்பட்டு சொந்த ஊரான ஸ்ரீதேவி குப்பத்துக்கு காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, புதுச்சத்திரம் அருகே வரும்போது பின்னால் தொடர்ந்த கார் மற்றும் இருசக்கர வாகனம் தன் மீது மோதி விட்டதாக கூறி வழிமறித்தனர்.
காரில் இருந்த அனிதாவை கீழே இறக்கிவிட்டு விட்டு உமேஷ் குமாரை காரில் கடத்திச் சென்றனர்.
இதுகுறித்து அனிதா தனது கணவரை கடத்திச் சென்று விட்டதாக வெள்ளவேடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் பூந்தமல்லி உதவி ஆணையர் ஜவகர், இன்ஸ்பெக்டர் இளையராஜா மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.