உள்ளூர் செய்திகள்

விருகம்பாக்கத்தில் தண்ணீர் வாளிக்குள் தவறிவிழுந்து ஒருவயது குழந்தை பலி

Published On 2023-01-16 12:42 IST   |   Update On 2023-01-16 12:42:00 IST
  • குழந்தை இளமாறனின் பிறந்தநாள் விழா கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் கொண்டாடி உள்ளனர்.
  • குழந்தை இளமாறன் தண்ணீர் வாளிக்குள் தவறி விழுந்து பலியான சம்பவம் அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

போரூர்:

சென்னை விருகம்பாக்கம், ராஜேஸ்வரி காலனி பகுதியை சேர்ந்தவர் அருண்குமார், வியாபாரிகள் சங்க நிர்வாகி. இவரது மனைவி தேவகி. இவர்களது மகன் இளமாறன் (வயது1).

நேற்று முன்தினம் இரவு தேவகி சமையல் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். மற்றவர்கள் அனைவரும் டிவி பார்த்துக் கொண்டு இருந்தனர். அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தை இளமாறன் திடீரென மாயமாகிவிட்டான். இதனால் அதிர்ச்சி அடைந்த தேவகி தேடிய போது கழிவறையில் உள்ள தண்ணீர் வாளிக்குள் குழந்தை இளமாறன் மூழ்கிய நிலையில் மயங்கி கிடப்பதை கண்டு தேவகி அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக குழந்தையை மீட்டு கீழ்ப்பக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே குழந்தை இளமாறன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்து சென்ற விருகம்பாக்கம் போலீசார் குழந்தை இளமாறன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தை இளமாறனின் பிறந்தநாள் விழா கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் கொண்டாடி உள்ளனர். இந்த நிலையில் குழந்தை இளமாறன் தண்ணீர் வாளிக்குள் தவறி விழுந்து பலியான சம்பவம் அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News