null
தமிழகத்தில் அரசு வேலைக்காக 67½ லட்சம் பேர் காத்திருப்பு
- தமிழகத்தில் 10-ம் வகுப்பு, பிளஸ்-2 மற்றும் கல்லூரி படிப்புகளை முடித்து வெளியேறுபவர்கள் அரசின் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வருகின்றனர்.
- கடந்த பிப்ரவரி 28-ந் தேதி வரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த பதிவுதாரர்கள் எண்ணிக்கை பற்றிய விவரம் வெளியாகி உள்ளது.
சென்னை:
தமிழகத்தில் 10-ம் வகுப்பு, பிளஸ்-2 மற்றும் கல்லூரி படிப்புகளை முடித்து வெளியேறுபவர்கள் அரசின் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வருகின்றனர். அவர்கள் தங்களுடைய வேலைவாய்ப்பு பதிவை புதுப்பித்தும் வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 28-ந் தேதி வரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த பதிவுதாரர்கள் எண்ணிக்கை பற்றிய விவரம் வெளியாகி உள்ளது.
18 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள் 18 லட்சத்து 74 ஆயிரத்து 522 பேரும்; 19 முதல் 30 வயது வரையுள்ளவர்கள் 28 லட்சத்து 9 ஆயிரத்து 940 பேரும்; 31 முதல் 45 வயது வரையுள்ளவர்கள் 18 லட்சத்து 34 ஆயிரத்து 217 பேரும்;
46 முதல் 60 வயதுள்ளவர்கள் 2 லட்சத்து 30 ஆயிரத்து 976 பேரும்; 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 5 ஆயிரத்து 811 பேரும் பதிவு செய்து வேலைக்காக காத்து இருக்கின்றனர்.
அவர்களில் பட்டதாரி ஆசிரியர்கள் 3 லட்சத்து 35 ஆயிரத்து 996 பேர். முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் 2 லட்சத்து 49 ஆயிரத்து 826 பேராகும். என்ஜினீயரிங் பட்டதாரிகள் 2 லட்சத்து 92 ஆயிரத்து 396 பேர், என்ஜினீயரிங் முதுகலை பட்டதாரிகள் 2 லட்சத்து 58 ஆயிரத்து 662 பேர்.
ஆக மொத்தம் தமிழகத்தில் 67 லட்சத்து 55 ஆயிரத்து 466 பேர் பெயர் பதிவு செய்து அரசு வேலைக்காக காத்திருப்பதாக வேலைவாய்ப்பு மற்றும் பதிவுத்துறை அறிவித்துள்ளது. இவர்களில் 31 லட்சத்து 47 ஆயிரத்து 605 பேர் ஆண்கள். 36 லட்சத்து 7 ஆயிரத்து 589 பேர் பெண்கள். 272 பேர் மூன்றாம் பாலினத்தவராகும்.