சிறப்பு அலங்காரத்தில் ஹரித்ரா விநாயகர்.
ஹரித்ரா விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு வழிபாடு
- ஒன்பது தீபமேற்றி ஒன்பது முறை வலம் வந்து வழிபட்டால் நவக்கிரக தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.
- நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை தரிசனம் செய்தார்கள்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் அருகில் உள்ள பிள்ளையார்பட்டி கிராமத்தில் மாமன்னன் இராஜராஜன் சோழன் கட்டிய புகழ்பெற்ற ஹரித்ரா விநாயகர் கோவில் அமைந்துள்ளது.
இங்கு மாதந்தோறும் பக்தர்கள் தங்களது கடன் தொல்லைகள் நீங்க வேண்டி ஹரித்ரா விநாயகருக்கு நவதானியங்கள் முடிச்சு சமர்ப்பித்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். தொடர்ந்து ஒன்பது சங்கடஹர சதுர்த்தி அன்று ஒன்பது தீபமேற்றி ஒன்பது முறை வலம் வந்து வழிபட்டால் நவக்கிரக தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். இங்கு மாதந்தோறும் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம்.
இக்கோவிலில் நேற்று ஐப்பசி மாத சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு ஹரித்ரா விநாயகருக்கு 16வகை செல்வங்களை வாரி வழங்கும் 16 வகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதனைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரமும் சகஸ்ரநாம அர்ச்சனையும் தீபாராதனையும் நடந்தது. இந்த வழிபாட்டில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை தரிசனம் செய்தார்கள். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.