உள்ளூர் செய்திகள்

சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

பீர் பாட்டிலால் வாலிபரை குத்தி கொலை செய்ய முயன்ற கும்பல்

Published On 2022-11-18 09:53 GMT   |   Update On 2022-11-18 09:53 GMT
  • பொதுமக்கள் சாலை மறியல்
  • போலீசார் வலிசாரணை

அரக்கோணம்:

அரக்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் (வயது 38). அப்பகுதியில் கோவில் ஒன்று உள்ளது. அந்தக் கோவில் அருகில் 6 பேர் கொண்ட கும்பல் மது அருந்தியதாக கூறப்படுகிறது.

அப்போது கோயில் அருகே ஏன் மது குடிக்கிறீர்கள் என நாகராஜ் கேட்டுள்ளார். மேலும் அவர்களுக்கு அறிவுரை வழங்கியதாக தெரிகிறது.

இதில் ஆத்திரமடைந்த கும்பல் பீர் பாட்டிலை உடைத்து நாகராஜை குத்தியதாக கூறப்படுகிறது. இதில் ரத்த வெள்ளத்தில் நாகராஜ் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் அப்பகுதி மக்கள் இதுபோன்று அடிக்கடி குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்டு வருவதாகவும் எனவே அவர்களை கைது செய்யக்கோரி சுமார் 100-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் ஈடுபட்டனர். இதனால் அரக்கோணம்- காஞ்சிபுரம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த அரக்கோணம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமன் ராஜா மற்றும் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பொதுமக்கள் மர்ம கும்பலை கைது செய்ய‌ கோரி கோஷங்களை எழுப்பினர். போலீசார் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News