உள்ளூர் செய்திகள்

 அனிதா

வேலூரில் பிரசவத்தின்போது சென்னை போலீஸ்காரரின் மனைவி, குழந்தை பலி- பரபரப்பு புகார்

Published On 2024-12-17 13:00 IST   |   Update On 2024-12-17 13:00:00 IST
  • மருத்துவமனை நிர்வாகம் சார்பாக அலட்சியமாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது.
  • அனிதாவின் உறவினர்கள் டாக்டர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வேலூர்:

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள இரும்பேடு கிராமத்தை சேர்ந்தவர் கோடீஸ்வரன். இவர் ஆவடி ஆயுதபடையில் போலீசாக பணிபுரிந்து வருகிறார்.

இவரது மனைவி அனிதா (வயது 24). கர்ப்பமாக இருந்தார். இவர் கடந்த 12-ந்தேதி வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார்.

பிரசவத்திற்காக வழங்கப்பட்ட தேதி கடந்து சென்றதால் தன் மனைவிக்கு அறுவை சிகிச்சை செய்தாவது பிரசவம் பார்க்கும்படி அனிதாவின் கணவர் மருத்துவமனையை அணுகி கேட்டுள்ளார். இதற்கு மருத்துவமனை நிர்வாகம் சார்பாக அலட்சியமாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது.

நேற்று காலை அனிதா தனக்கு பிரசவ வலி ஏற்பட்டதாக கூறினார். நேற்று மாலை பிரசவத்துக்கான சிகிச்சையை மருத்துவர்கள் தொடங்கினர். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை பிரசவத்தின் போது ஆண் குழந்தை இறந்தே பிறந்தது. அதன் பின்னர் சிறிது நேரத்தில் தாயும் இறந்தார்.

இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அனிதாவின் உறவினர்கள் டாக்டர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்களால் தான் தன் மனைவியும், தன் குழந்தையும் இறந்துள்ளதாக கோடீஸ்வரன் வேலூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதுகுறித்து போலீசார் மற்றும் சுகாதார துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Tags:    

Similar News