உள்ளூர் செய்திகள்

வீட்டு முன்பு விளையாடிய 2 வயது குழந்தையை கடத்திய முதியவர் கைது

Published On 2023-02-04 05:01 GMT   |   Update On 2023-02-04 05:01 GMT
  • அகிலாவின் குழந்தைகள் வீட்டு முன்பு விளையாடிக் கொண்டிருந்தனர்.
  • ராஜப்பன் ஏன் குழந்தையை தூக்கிச் சென்றார் என்ற விவரம் தெரியவில்லை.

தக்கலை:

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள மணலி கரை கண்டார்கோணத்தில் வசிப்பவர் பாலகிருஷ்ணன். இவரது மகள் அகிலா (வயது 30).

இவர் கணவர் கண்ணனுடன் சென்னை குரோம்பேட்டையில் வசித்து வருகிறார். இவர்களுக்கு அகிலா(6), சஷ்விகா (2) என்ற மகள்கள் உள்ளனர்.

இந்த நிலையில் உறவினரின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அகிலா குடும்பத்தினருடன் சொந்த ஊருக்கு வந்தார். நேற்று காலை அவர்கள் உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

அகிலாவின் குழந்தைகள் வீட்டு முன்பு விளையாடிக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் குழந்தை சஷ்விகா திடீரென மாயமானார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

குழந்தையை காணாததால் உறவினர்கள் கண்ணீரும் கம்பலையுமாக தேடத் தொடங்கினர். இதுகுறித்து போலீசாருக்கும் தகவல் கிடைத்தது. அதன்பேரில் தக்கலை போலீசார் விரைந்து வந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அந்தப் பகுதியில் உள்ள வீடுகளிலும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியில் வசிக்கும் ராஜப்பன் ஆசாரி (70) ஒரு குழந்தையை தூக்கிச் சென்றதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார், அவரது வீட்டுக்குச் சென்று சோதனை நடத்தினர். அப்போது குழந்தை சஷ்விகா அங்கு இருப்பது தெரிய வந்தது.

குழந்தை மாயமான 4 மணி நேரத்தில் போலீசார் அதிரடியாக செயல்பட்டு மீட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. ராஜப்பன் ஏன் குழந்தையை தூக்கிச் சென்றார் என்ற விவரம் தெரியவில்லை.

போலீசார், அவரை கைது செய்து இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். தனியாக வசித்து வரும் ராஜப்பன் நகைக்காக குழந்தையை தூக்கிச் சென்றிருக்கலாமா? அல்லது வேறு ஏதும் காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News