உள்ளூர் செய்திகள்

வெள்ளோடு அருகே திருமணமான 3-வது நாளில் புதுமாப்பிள்ளை தற்கொலை

Published On 2022-06-23 09:56 GMT   |   Update On 2022-06-23 09:56 GMT
  • குமாரும், கவிதாவும் மோட்டார் சைக்கிளில் பெருந்துறை சென்றுள்ளனர்.
  • குமாரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஆர்.எஸ். அருகில் உள்ள கொம்மக்கோவில் பகுதியை சேர்ந்தவர் குமார் (32). இவருக்கும் மதுரை மாவட்டம் திருபுவனத்தை சேர்ந்த கவிதா என்பவருக்கும் கடந்த 19-ந் தேதி சென்னிமலை முத்தையன்கோவிலில் திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் நேற்று காலையில் குமாரும், கவிதாவும் மோட்டார் சைக்கிளில் பெருந்துறை சென்றுள்ளனர். மதியம் 2.30 மணியளவில் குமார் மட்டும் வீட்டுக்குத் திரும்பி வந்துள்ளார். வீட்டில் இருந்தவர்கள் விசாரித்ததில் கவிதா வரவில்லை என்பதும், குமார் விஷம் குடித்து விட்டு வந்ததும் தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து உடனடியாக குமாரை சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். பின்னர் குமார் மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் குமார் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் வெள்ளோடு போலீசார் வழக்கு பதிவு செய்து குமார் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணமான 3-வது நாளில் புது மாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News