உள்ளூர் செய்திகள்

முல்லைபெரியாறு அணை (கோப்பு படம்)

ஒரே மாதத்தில் 13 அடி சரிந்த முல்லைபெரியாறு அணை நீர்மட்டம்

Published On 2023-01-28 04:57 GMT   |   Update On 2023-01-28 04:57 GMT
  • இதனால் கடந்தமாதம் 142 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று காலை 129.15 அடியாக சரிந்துள்ளது.
  • ஒரே மாதத்தில் சுமார் 13 அடி குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அணையிலிருந்து 1167 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

கூடலூர்:

தேனி மாவட்டம் கூடலூர் அருகே கேரள எல்லை பகுதியில் அமைந்துள்ள முல்லைபெரியாறு அணை மூலம் தமிழகத்தில் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் இந்த தண்ணீர் மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கரில் இருபோக நெல்சாகுபடி நடைபெற்று வருகிறது.

152 அடி உயரம் கொண்டுள்ள முல்லைபெரியாறு அணையில் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்பேரில் 142 அடிவரை தண்ணீர் தேக்கப்படுகிறது. அணையை கண்காணிக்க மூவர் குழுவும் அவர்களுக்கு உதவியாக ஐவர் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் அணையை கண்காணித்து உறுதித்தன்மை குறித்த அறிக்கையை சமர்பித்து வருகின்றனர்.

பலமுறை சோதித்து பார்த்தபின்னரும் அணை உறுதியுடன் இருப்பதாக தெரிவித்தனர். ஆனால் கேரளா அரசு நீர்மட்டத்தை குறைக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. பருவமழையின் போது நீர்வரத்து அதிகரித்தது. இதனால் கடந்த மாதம் அணையின் நீர்மட்டம் 142 அடிவரை உயர்ந்தது.

அதனைதொடர்ந்து சில நாட்கள் அதே நீர்மட்டத்தில் நிலைநிறுத்தி அதிகாரிகள் கண்காணித்தனர். தமிழக விவசாயத்திற்காக அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது மழை ஓய்ந்த நிலையில் அணைக்கு 107 கனஅடிநீர் மட்டுமே வருகிறது.

ஆனால் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் கடந்தமாதம் 142 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று காலை 129.15 அடியாக சரிந்துள்ளது. ஒரே மாதத்தில் சுமார் 13 அடி குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அணையிலிருந்து 1167 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

வைகை அணையின் நீர்மட்டம் 52.66 அடியாக உள்ளது. 879 கனஅடிநீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 69 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 49.75 அடியாக உள்ளது. 38 கனஅடிநீர் வருகிறது. 80 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 104.14 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 25 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

Tags:    

Similar News