உள்ளூர் செய்திகள்

சேலம்-பெங்களூர் பைபாஸ் சாலையில் லிப்ட் கேட்டு வாலிபரிடம் மொபட் பறிப்பு

Published On 2022-06-14 09:03 GMT   |   Update On 2022-06-14 09:03 GMT
சேலம்-பெங்களூர் பைபாஸ் சாலையில் லிப்ட் கேட்டு வாலிபரிடம் மொபட்டை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.

சேலம்:

சேலம் சூரமங்கலம் சுந்தர் நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் விக்னேஷ் (வயது 22). இவர் நேற்று இரவு 10 மணியளவில் சேலம் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் டால்மியா போர்டு அருகே மொபட்டில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது அந்த பகுதியில் ரோட்டில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு நின்றுகொண்டிருந்த 2 பேர் விக்னேசை நிறுத்தி தங்களது வண்டியில் பெட்ரோல் தீர்ந்துவிட்டதாகவும், அதனால் விக்னேஷ் வண்டியில் அமர்ந்து கொண்டு வண்டியை இழுத்துச் செல்வதாக கூறியுள்ளனர்.இதற்கு சம்மதம் தெரிவித்த விக்னேஷ் தனது வண்டியை லிப்ட் கேட்டவர்களிடம் கொடுத்து ஓட்டச் சொல்லிக் விட்டு பெட்ரோல் தீர்ந்த வண்டியில் அமர்ந்துகொண்டார்.

அவர்கள் மொபட்டை ஓட்டிக் கொண்டு காலால் மோட்டார் சைக்கிளை தள்ளிக் கொண்டு சென்றனர்.பெட்ரோல் பங்க் அருகே வந்ததும் மொபட்டை ஓட்டி வந்த நபர்கள் திடீரென மின்னல் வேகத்தில் தப்பி மறந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த விக்னேஷ் இதுகுறித்து உடனடியாக சூரமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

நூதன முறையில் மொபட்டை திருடிச் சென்ற நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள். அந்த நபர்கள் விட்டுச் சென்ற மோட்டார் சைக்கிளும் வேறு எங்கேயும் திருடி வந்து இருக்கலாம் என்று கருதி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

Tags:    

Similar News