உள்ளூர் செய்திகள்

கொல்லங்கோடு கடற்கரையில் மாயமான மாணவி மும்பையில் இருப்பது செல்போன் சிக்னல் மூலம் கண்டுபிடிப்பு

Published On 2022-12-04 11:12 GMT   |   Update On 2022-12-04 11:12 GMT
  • பர்தா அணிந்து ஆட்டோவில் ஏறியவர், களியக்காவிளையில் உள்ள ஒரு பேக்கரியில் ‘கூகுள் பே’ செய்து பணம் பெற்றார் என தெரிய வந்தது.
  • மாணவி மும்பை சென்றது ஏன்? அவர் தானாக சென்றாரா? அல்லது கடத்தப்பட்டாரா? என போலீசார் விசாரணையை தொடங்கினர்.

நித்திரவிளை:

குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே உள்ள மேடவிளாகம் பகுதியைச் சேர்ந்த 21 வயது இளம்பெண், கல்லூரியில் முதுகலை பயின்று வந்தார்.

அவர் சில நாட்களுக்கு முன்பு ஒரு ஞாயிற்றுக்கிழமை உறவினருடன், பொழியூர் கடற்கரை பகுதிக்குச் சென்றுள்ளார். அங்கு அவர் உறவினரின் பார்வையில் இருந்து திடீரென மாயமாகி விட்டார்.

மாணவியின் கைப்பை மற்றும் காலணிகள் கடற்கரையிலேயே கிடந்தன. இதுகுறித்த புகாரின் பேரில் பொழியூர் போலீசார் விசாரணை நடத்தினர். மாணவியின் வீட்டில் சோதனை செய்தபோது, தற்கொலை செய்து கொள்ள மாணவி முடிவெடுத்ததாக எழுதப்பட்ட கடிதம் கிடைத்தது.

இதனால் மாணவி தற்கொலை செய்திருக்கலாமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். மரைன் போலீசாரும் கடற்கரை பகுதிகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதற்கிடையில் அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தனர்.

அப்போது, சந்தேகம் அளிக்கும் வகையில் பர்தா அணிந்த ஒருவர் ஆட்டோவில் ஏறிச் செல்வது தெரிய வந்தது. அது மாணவியாக இருக்கலாமா? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட ஆட்டோ டிரைவரை அழைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது பர்தா அணிந்து ஆட்டோவில் ஏறியவர், களியக்காவிளையில் உள்ள ஒரு பேக்கரியில் 'கூகுள் பே' செய்து பணம் பெற்றார் என தெரிய வந்தது. இதனை தொடர்ந்து 'கூகுள் பே' பயன்படுத்திய செல்போன் எண்ணை வைத்து, போலீசார் விசாரணை தொடங்கினர்.

இதில் தற்போது அந்த செல்போன் சிக்னல் மும்பையில் இருப்பது தெரிய வந்தது. அதன் அடிப்படையில் மாணவி மும்பையில் இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனை தொடர்ந்து பொழியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சஜிகுமார் தலைமையில் போலீசார் மும்பை சென்றுள்ளனர்.

மாணவி மும்பை சென்றது ஏன்? அவர் தானாக சென்றாரா? அல்லது கடத்தப்பட்டாரா? என போலீசார் விசாரணையை தொடங்கினர். அப்போது மாணவி, கல்லூரிக்கு வருகை குறைவு காரணமாக தேர்வு எழுதவில்லை என்பதும் அதனால் அவர் ஊரை விட்டு சென்றிருக்கலாம் என்ற தகவலும் கிடைத்து உள்ளது.

இதுகுறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மும்பை சென்ற போலீசார், மாணவியுடன் திரும்பினால் தான், இந்தப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்.

Tags:    

Similar News