உள்ளூர் செய்திகள்

மாட்டுப்பண்ணை ஊழியர் கொலை வழக்கில் 2 சிறுவர்கள் கைது

Published On 2023-08-22 08:01 GMT   |   Update On 2023-08-22 08:01 GMT
  • மாட்டுப் பண்ணை ஊழியர் கொலை வழக்கில் 2 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.
  • திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

திருமங்கலம்

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியை சேர்ந்தவர் மாரிச்சாமி (வயது 34). இவரது மனைவி பாக்கியலட்சுமி (28). இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். கள்ளிக்குடி அருகேயுள்ள அகத்தாபட்டியை சேர்ந்த பாலுசாமி என்பவர் சிவரக்கோட்டையில் மாட்டுப் பண்ணை வைத்துள்ளார்.

இந்த பண்ணையில் கார் டிரைவராக வேலை பார்த்து வந்த மாரிச்சாமி சிவரக்கோட்டை சூர்யா நகரில் குடும்பத்துடன் தற்போது குடியிருந்து வந்தார். கடந்த 18-ந்தேதி வேலைக்கு சென்ற கணவர் வீடு திரும்பாததால் மனைவி கள்ளிக்குடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் மாரிச்சாமி வேலைபார்த்த மாட்டுப் பண்ணையில் விசாரணை நடத்திய போலீசார் உள்ளே சென்று பார்த்த போது அங்குள்ள தண்ணீர் தொட்டியில் மாரிச்சாமி பிணமாக மிதந்தார். போலீசார் அவரது உடலை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்த திருமங்கலம் துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்த குமார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டார்.

மேலும் விசாரணையில் அங்கு பால் கறவை செய்து வரும் 17 வயது சிறுவன் முன் விரோதத்தில் தனது கூட்டாளிகளுடன் வந்து மாரிச்சாமியை அடித்து கொலை செய்து விட்டு, அதனை மறைக்க தண்ணீர் தொட்டியில் வீசிச் சென்றது தெரியவந்தது. இதனை தொடர்ந்து 17 வயது சிறுவன் மற்றும் அவனது கூட்டாளிகளை போலீசார் தேடிவந்தனர். இந்த நிலையில் கொலைக்கு காரணமாக கருதப்படும் 17 வயது சிறுவன், 15 வயது சிறுவன் ஆகிய 2 பேரை கள்ளிக்குடி போலீசார் கைது செய்துள்ளனர்.

Tags:    

Similar News