உள்ளூர் செய்திகள்

காதலனுடன் ஊட்டிக்கு சென்ற இளம்பெண் கடத்தல்- போலீஸ் என்று கூறி கடத்திய வாலிபருக்கு வலைவீச்சு

Published On 2023-04-07 07:42 GMT   |   Update On 2023-04-07 07:42 GMT
  • போலீசார் மாவட்டம் முழுவதும் உள்ள சோதனை சாவடிகளுக்கு தகவல் தெரிவித்து வாலிபரை பிடிக்க உத்தரவிட்டனர்.
  • போலீசார் மதுரை சென்று இளம்பெண்ணை மீட்டு பல்லடத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

திருப்பூர்:

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பகுதியை சேர்ந்தவர் ரோபாஸ்டன் (வயது 21). மீனவர். இவர் அந்த பகுதியை சேர்ந்த 21வயதான இளம்பெண்ணை கடந்த 3 வருடங்களாக காதலித்து வந்தார். இந்தநிலையில் இருவரும் ஊட்டிக்கு செல்ல திட்டமிட்டனர்.

இதையடுத்து நேற்று சாயல்குடியில் இருந்து ஊட்டிக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர். மதுரை, ஒட்டன்சத்திரம், தாராபுரம் வழியாக சென்று கொண்டிருந்தனர். பல்லடம் அருகே செல்லும் போது திடீரென அவர்களது மோட்டார் சைக்கிளை பின்தொடர்ந்து வாலிபர் ஒருவர் வந்தார்.

திடீரென 2பேரையும் வழிமறித்த அவர், நான் போலீஸ், உங்களை பார்க்கும் போது எனக்கு சந்தேகமாக இருக்கிறது. உங்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்த வேண்டும் என்று கூறிய அந்த வாலிபர், ரோபாஸ்டனை மோட்டார் சைக்கிளில் ஒரு கி.மீ. தூரம் வரை அழைத்து சென்ற அவர், பல்லடம் -திருச்சி சாலை மாதப்பூர் கருப்பசாமி கோவில் அருகே நிற்க வைத்து விட்டு, காதலியிடம் விசாரணை நடத்த செல்வதாக கூறிவிட்டு சென்றார்.

இந்நிலையில் அந்த வாலிபர் மீது சந்தேகமடைந்த ரோபாஸ்டன் உடனே காதலி நிற்குமிடத்திற்கு சென்று பார்த்தார். அப்போது அங்கு காதலியை காணவில்லை. அதிர்ச்சியடைந்த அவர் அப்பகுதியில் தேடி பார்த்தார். ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. உடனே இது குறித்து பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

போலீசார் மாவட்டம் முழுவதும் உள்ள சோதனை சாவடிகளுக்கு தகவல் தெரிவித்து வாலிபரை பிடிக்க உத்தரவிட்டனர். இதைத்தொடர்ந்து போலீசார் மாவட்டம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகிய காட்சிகளையும் பார்வையிட்டனர்.

இந்நிலையில் இன்று காலை கடத்தப்பட்ட இளம்பெண் மதுரையில் நிற்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மதுரை சென்று இளம்பெண்ணை மீட்டு பல்லடத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர், போலீஸ்காரர் என்று கூறியதால் வாலிபருடன் சென்றதாக கூறினார். இதையடுத்து போலீஸ்காரர் என்று கூறி இளம்பெண்ணை கடத்திய வாலிபர் யார் , எதற்காக கடத்தி சென்றார் என்று போலீசார் விசாரணை நடத்தி அந்த வாலிபரை தேடி வருகின்றனர். காதலனுடன் ஊட்டிக்கு சென்ற இளம்பெண்ணை வாலிபர் கடத்திய சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News