அனைத்துத் துறை அலுவலகங்களிலும் தூய்மைப் பணியாளர்களுக்கு ஓய்வறை
- அனைத்துத் துறை அலுவலகங்களிலும் தூய்மைப் பணியாளர்களுக்கு ஓய்வறை அமைக்கப்பட்டுள்ளன
- குடிநீர், கழிப்பறை வசதியுடன் அமைப்பு
கரூர்:
கரூர் மாவட்டத்தில் அனைத்துத் துறை அலுவலகங்களிலும் தூய்மை பணியாளர்களுக்கு குடிநீர், கழிப்பறை வசதியுடன் கூடிய ஓய்வறை அமைத்து அதன் புகைப்படத்தை கலெக்டர் அலுவலகத்தில் அனைத்துத் துறை அலுவலர்கள் சமர்ப்பித்தனர்.
கரூர் கலெக்டர் பிரபு சங்கர் 2 வாரங்களுக்கு முன்பு அனைத்து துறை அலுவலகங்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியிருந்தார். அதில் மனித உரிமை ஆணையத்தின் பரிந்துரைப்படி தலைமைச் செயலாளர் அறிவுறுத்தலின் பேரில் அனைத்துத் துறை அலுவலகங்களிலும் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு குடிநீர், கழழிப்பறை வசியுடன் கூடிய ஓய்வறை அமைத்து அந்த புகைப்படத்தை கலெக்டர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தியிருந்தார்.
ஆனால் 2 வாரங்களுக்கு மேலாகியும் யாரும் இப்பணிகளை மேற்கொள்ளாததால் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்க அலுவலர்கள் வரும் போது இந்த புகைப்படத்தை அவசியம் ெகாண்டு வந்து சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தியிருந்தார்.
இதையடுத்து தூய்மை பணியாளர்களுக்கு குடிநீர், கழிப்பறையுடன் கூடிய ஓய்வறை தயார் செய்து அதை புகைப்படம் எடுத்து கலெக்டர் அலுவலகத்தில் அனைத்துத் துறை அலுவலர்கள் ஒப்படைத்தனர்.
மேலும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தூய்மை பணியாளர்களுக்கு குடிநீர், கழிப்பறையுடன் அமைக்கப்பட்டுள்ள ஓய்வறையை கலெக்டர் பிரபுசங்கர் திறந்து வைத்து பார்வையிட்டார்.