உள்ளூர் செய்திகள்

காவிரி ஆற்றில் மூழ்கிய சிறுவனை தேடும் பணி தீவிரம்

Published On 2022-08-21 07:07 GMT   |   Update On 2022-08-21 07:07 GMT
  • காவிரி ஆற்றில் மூழ்கிய சிறுவனை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
  • ஆற்றில் அருண்குமாரும், சுரேந்தரும் குளித்துக் கொண்டிருந்தனர்.

கரூர்:

கரூா் மாவட்டம், குளித்தலை வட்டத்திற்கு உட்பட்ட கழுகூர் பகுதியைச் சேர்ந்தவர் கலையரசன் (வயது 26). இவர் வேலாயுதம்பாளையம் பகுதியில் உள்ள பேக்கரியில் வேலை செய்து வருகிறார். இவருக்கு சில பிரச்சினைகள் இருந்து வந்த காரணத்தால் பரிகாரம் செய்வதற்காக தனது ஊருக்கு வந்துள்ளார்.பரிகாரம் செய்த பிறகு பரிகாரம் செய்யப்பட்ட தகரத்திலான தகடை ஆற்றில் விடுவதற்காக குளித்தலை கடம்பந்துறை காவிரி ஆற்று பகுதிக்கு வந்துள்ளார். இவருடன் அதே ஊரைச் சேர்ந்த சுரேந்தர் (17), அருண்குமார் (22) ஆகிய 2 பேரும் வந்துள்ளனர்.

கலையரசன் பரிகார தகடை ஆற்றில் விட்டு விட்டு கரைக்கு வந்துள்ளார். ஆற்றில் அருண்குமாரும், சுரேந்தரும் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக சுரேந்தர் ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்றதாகவும், தண்ணீரின் வேகத்தின் காரணமாக அவர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டுள்ளார்.இதைப் பார்த்த கலையரசன் அவரை காப்பாற்ற முயற்சித்தபோதும் சுரேந்தர் தண்ணீரில் ஆழமான பகுதிக்கு இழுத்து செல்லப்பட்டுள்ளார். சுரேந்தர் தண்ணீரில் மூழ்கியது குறித்து அருண்குமார், கலையரசன் ஆகியோர் அவர்களது உறவினர்களுக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

அதுபோல முசிறி தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் கழுகூர் பகுதியைச் சேர்ந்த சிலர் ஆற்றில் மூழ்கிய சுரேந்தரை தேடும் பணியில் ஈடுபட்டனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆற்றில் மூழ்கி 2 பேர் இறந்த சம்பவத்தை தொடர்ந்து மேலும் சிறுவன் ஒருவன் நேற்று காவிரி ஆற்றில் மூழ்கிய சம்பவம் பொதுமக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News