குமரி எல்லை பகுதியில் உள்ள கோழிவிளை, சூழால் சோதனை சாவடியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
- போலீசார் பொதுமக்களிடம் பேசும் போது மரியாதையான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும்.
- பொதுமக்களிடம் கண்ணியமாகவும், பொறுப்பாகவும், மதிப்புடனும் நடந்து கொள்ள வேண்டும்.
நாகர்கோவில்:
குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், கஞ்சா மற்றும் குட்கா விற்பனையை தடுக்க பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். மாவட்ட எல்லை பகுதிகளில் உள்ள களி யக்காவிளை, சூழால் சோதனைச் சாவடிகளிலும் பாதுகாப்பை பலப்படுத்தி கேரளாவில் இருந்து குமரி மாவட்டத்திற்கு கஞ்சா கொண்டு வருவதை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு உள்ளார்.
இந்த நிலையில் கொல்லங்கோடு போலீஸ் நிலையத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் ஆய்வு மேற்கொண்டார். அப்போது போலீசாரிடம் குறைகளை கேட்டு அறிந்தார். போலீஸ் நிலையத்தில் உள்ள கோப்புகளை ஆய்வு செய்தார்.
போலீஸ் நிலையத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும், வழக்கு தொடர்பான கோப்புகள் அனைத்தும் சரியான முறையில் கையாள வேண்டும் என்று அறிவுரைகளை வழங்கினார்.
இதைத் தொடர்ந்து கோழி விளை, சூழால் சோதனை சாவடிகளில் ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், போலீசார் பொதுமக்களிடம் பேசும் போது மரியாதையான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும். பொதுமக்களிடம் கண்ணியமாகவும், பொறுப்பாகவும், மதிப்புடனும் நடந்து கொள்ள வேண்டும்.
வாகன தணிக்கை மேற்கொள்ளும் போது கவனமாக இருக்க வேண்டும். வாகன சோதனையின் போது சாலை விதிமுறைகளை கடைபிடிக்காதவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீசார் உடல் நிலையில் கவனம் கொள்ள வேண்டும் என்றார்.