உள்ளூர் செய்திகள்

நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் சென்ற பஸ்சில் தவற விட்ட தங்க நகை பெண்ணிடம் ஒப்படைப்பு

Published On 2023-09-12 08:42 GMT   |   Update On 2023-09-12 08:42 GMT
  • பஸ்சின் இருக்கைக்கு கீழ் ஒரு தங்க பிரேஸ்லெட் கிடந்தது.
  • நகையை பத்திரமாக கொண்டு வந்து வழங்கிய கண்டக்டர் சத்தியதாசை அதிகாரிகள் பாராட்டினர்.

நாகர்கோவில் :

நாகர்கோவில் வடசேரியில் இருந்து திருவனந்தபுரத்திற்கு நேற்று காலை ஒரு அரசு பஸ் புறப்பட்டது. அந்த பஸ் மார்த்தாண்டம் அருகே சென்ற போது பஸ்சின் இருக்கைக்கு கீழ் ஒரு தங்க பிரேஸ்லெட் கிடந்தது. இதைப் பார்த்த பயணி ஒருவர் உடனே அதை மீட்டு பஸ் கண்டக்டர் சத்தியதாசிடம் கொடுத்தார். அந்த பிரேஸ்லெட் ¾ பவுன் இருந்தது. பின்னர் பஸ் நாகர்கோவில் வந்ததும் பிரேஸ்லெட் போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுதொடர்பாக போக்குவரத்து கழக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதற்கிடையே பஸ்சில் பயணம் செய்த காரங்காடு பகுதியைச் சேர்ந்த ஜெஸ்லின் பினி என்பவரின் பெற்றோர் தனது மகள் நகையை தவறவிட்டு விட்டதாக கூறி பஸ் நிலையத்தில் வந்து விசாரித்தனர்.

இதைத் தொடர்ந்து அவர்களை அழைத்து போக்குவரத்து கழக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். மேலும் பிரேஸ்லெட்டின் அடையாளங்களை கேட்டறிந்தனர். அப்போது பிரேஸ்லெட்டின் அடையாளங்களையும், ஜெஸ்லின் பினி பஸ்சில் பயணம் செய்தது குறித்த விவரங்களும் சரியாக இருந்ததைத் தொடர்ந்து அந்த பிரேஸ்லெட்டை உரியவரிடம் ஒப்படைத்தனர். நகையை பத்திரமாக கொண்டு வந்து வழங்கிய கண்டக்டர் சத்தியதாசை அதிகாரிகள் பாராட்டினர்.

Tags:    

Similar News