உள்ளூர் செய்திகள்

குமரி மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் 17,299 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி

Published On 2022-09-26 07:02 GMT   |   Update On 2022-09-26 07:02 GMT
  • மாவட்டம் முழுவதும் 82 சதவீதம் பேர் முதல்டோஸ் தடுப்பூசியும் 72 சதவீதம் பேர் 2-வது டோஸ் தடுப்பூசியும் செலுத்தி உள்ளனர்.
  • தடுப்பூசி முகாமில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதற்கு ஏராளமான இளைஞர்கள் இளம்பெண்கள் குவிந்தனர்.

நாகர்கோவில்:

குமரி மாவட்டம் முழுவதும் கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது.

மாவட்டம் முழுவதும் 82 சதவீதம் பேர் முதல்டோஸ் தடுப்பூசியும் 72 சதவீதம் பேர் 2-வது டோஸ் தடுப்பூசியும் செலுத்தி உள்ளனர். குறிப்பிட்ட நாள் கழிந்த பிறகும் பலரும் 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்தாமல் உள்ளது தெரிய வந்துள்ளது.மேலும் முதல் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்திய பலரும் 3-வது டோஸ் தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர்.

அவர்களை கண்டறிந்து தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகிறது. பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வசதியாக மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருக்கிறது. நேற்று மாவட்டம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடந்தது. தடுப்பூசி முகாமில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதற்கு ஏராளமான இளைஞர்கள் இளம்பெண்கள் குவிந்தனர். மெகா தடுப்பூசி முகாமில் 1452 பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசியும், 1894 பேருக்கு 2-வது டோஸ் தடுப்பூசியும், 13 ஆயிரத்து 800 பேருக்கு 3-வது டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. 15 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் 72 பேருக்கும் 12 வயது முதல் 14 வயது உட்பட்டவர்கள் 81 பேருக்கு என மொத்தம் நேற்று நடந்த மெகா தடுப்பூசி முகாமில் 17299 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

மாவட்டத்திலுள்ள 9 ஒன்றியங்கள் மற்றும் நாகர்கோவில் மாநகரப் பகுதியை பொருத்தமட்டில் தோவாளை ஒன்றியத்தில் மட்டுமே குறைவான நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அங்கு நேற்று நடந்த தடுப்பூசி முகாமில் 1329 பேர் தடுப்பூசி செலுத்தி உள்ளனர்.

அகஸ்தீஸ்வரம் ஒன்றியத்தில் 1436 பேரும் ராஜாக்கமங்கலம் ஒன்றியத்தில் 1750 பேரும் குருந்தன் கோடு ஒன்றியத்தில் 1988 பேரும் கிள்ளியூர் ஒன்றியத்தில் 2123 பேரும் முன்சிறை ஒன்றியத்தில் 1794 பேரும் மேற்புறம் ஒன்றியத்தில் 1694 பேரும் திருவட்டார் ஒன்றியத்தில் 1727 பேரும் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். தக்கலை ஒன்றியத்தில் 1556 பேரும் நாகர்கோவில் மாநகரப் பகுதியில் 1502 பேரும் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.

Tags:    

Similar News