உள்ளூர் செய்திகள்

தக்கலை அருகே ஆசிரியையிடம் 2 பவுன் நகை பறிப்பு

Published On 2023-04-02 07:24 GMT   |   Update On 2023-04-02 07:24 GMT
  • மோட்டார் சைக்கிளில் வந்து மர்ம நபர்கள் கைவரிசை
  • சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

கன்னியாகுமரி :

தக்கலை அருகே பள்ளியாடி முருங்கவிளை பகுதியை சேர்ந்தவர் ஹெலன் மேரி பிரேமா. (வயது40.) இவர் தக்கலை பகுதியில் ஒரு ஓட்டுனர் பயிற்சி பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

நேற்று இரவு சுமார் 8 மணிக்கு தக்கலையில் இருந்து இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.அப்போது 2 வாலிபர்கள் இவரை பின்தொடந்து வந்து கொண்டிருந்தனர்.இதை கண்ட பிரேமா தனது வாகனத்தை வேகமாக கொண்டு சென்றார். உடனே அந்த வாலிபர்கள் விரட்டி சென்று குழிக்கோடு பகுதியில் மடக்கினர். அதிர்ச்சி அடைந்த பிரேமா சத்தம் போடவே மர்ம நபர்கள் பிரேமாவின் கழுத்தில் கிடந்த தங்க செயினை பறிக்க முயன்றனர். பலத்த போராட்டத்தில் செயினை பறிக்க முடியாததால் பிரேமாவின் கையில் கிடந்த 2 பவுன் கை செயினை பறித்துவிட்டு பிரேமாவை கீழே தள்ளி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இது சம்மந்தமாக தக்கலை போலீஸ் நிலையத்தில் பிரேமா புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். செயின் பறித்த கொள்ளையர்கள் ஹெல்மெட் அணிந்து இச்சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.

Tags:    

Similar News