உள்ளூர் செய்திகள்

தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், தீர்த்தமலை கிராமத்தில் உள்ள தீர்த்தகிரீஸ்வரர் கோவிலின் அருகில் பிச்சை எடுத்து கொண்டிருந்த லட்சுமிக்கு இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் புதிய மின்னணு குடும்ப அட்டையை கலெக்டர் சாந்தி வழங்கினார்.

தீர்த்தகிரீஸ்வரர் கோவில் பகுதியில் பிச்சை எடுத்த பெண்ணுக்கு வீட்டு மனை, ரேஷன்கார்டு- தருமபுரி கலெக்டர் சாந்தி வழங்கினார்

Published On 2022-08-19 09:39 GMT   |   Update On 2022-08-19 09:39 GMT
  • தீர்த்தகிரீஸ்வரர் கோவில் பகுதியில் சுற்றுலா மேம்பாட்டு பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் சாந்தி ஆய்வு நடத்தினார்.
  • பிச்சை எடுத்து கொண்டிருந்த விதவை தாயான லட்சுமிக்கு இலவச வீட்டுமனை பட்டா மற்றும் புதிய மின்னணு குடும்ப அட்டையினை நேரில் வழங்கி மறுவாழ்வு ஏற்படுத்தியுள்ளார்.

தருமபுரி,

தருமபுரி மாவட்டம், அரூர் அடுத்த தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவில் பகுதியில் சுற்றுலா மேம்பாட்டு பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் சாந்தி ஆய்வு நடத்தினார்.

அப்போது அந்த கோவிலில் அருகில் மனநலம் குன்றிய மகனோடு லட்சுமி என்ற பெண் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார்.

இது பற்றி அவரிடம் விசாரித்தபோது மொண்டுகுழி கிராமத்தை சேர்ந்த அவருடைய கணவர் 8 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டது தெரிய வந்தது. 12 வயது மகள் தீர்த்தமலை அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருவது தெரியவந்தது.

இருளர் பழங்குடி இனத்தை சேர்ந்த விதவையான லட்சுமி மற்றும் அவருடைய குழந்தைகளின் வாழ்வாதாரத்திற்கு தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் சாந்தி உத்தரவிட்டார். அதன்படி உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் அரூர் வட்டம், தீர்த்தமலை உள்வட்டம், சிட்லிங் ஊராட்சி, வேலனூர் கிராமத்தில் நடைபெற்ற மாவட்ட கலெக்டர் மக்கள் தொடர்பு திட்டமுகாமில் தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி, தீர்த்தமலை கிராமத்தில் உள்ள தீர்த்தகிரீஸ்வரர் கோவில் அருகில் மனநலம் குன்றிய மகனோடு வறுமையின் பிடியில், வாழ்வாதாரம் இன்றி பிச்சை எடுத்து கொண்டிருந்த விதவை தாயான லட்சுமிக்கு இலவச வீட்டுமனை பட்டா மற்றும் புதிய மின்னணு குடும்ப அட்டையினை நேரில் வழங்கி மறுவாழ்வு ஏற்படுத்தியுள்ளார்.

இதுமட்டுமல்லாமல், அரூர் வட்டம், வேடகட்ட மடுவு ஊராட்சி, டி.ஆண்டியூர், மொண்டுகுழி கிராமத்தில் லட்சுமி வசித்து வரும் பகுதியிலேயே அரசு புறம்போக்கு நிலத்தில் வசித்து வரும் இருளர் பழங்குடியினத்தை சேர்ந்த 20 நபர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களும், 5 நபர்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளும் மக்கள் தொடர்பு திட்டமுகாமில் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News