உள்ளூர் செய்திகள்

அரசு பஸ் - கார் மோதல்; டிரைவர் பலி

Published On 2022-12-22 13:40 IST   |   Update On 2022-12-22 13:40:00 IST
  • கோவையிலிருந்து கும்பகோணம் நோக்கி வந்த அரசு பஸ் பொங்கலூர் டெலிபோன் எக்சேஞ்ச் அருகே வந்தபோது காருடன் நேருக்கு நேர் மோதியது.
  • பல்லடம் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து காருக்குள் சிக்கி இறந்து போன டிரைவர் தாசை வெளியே கொண்டு வந்தனர்

பல்லடம் :

பல்லடம் ராயர்பாளையத்தைச் சேர்ந்த ராஜன் என்பவரது மகன் தாஸ் (வயது 45). இவர் பல்லடத்தில் வாடகை காரின் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவர் காங்கேயத்தில் இருந்து பல்லடம் நோக்கி நேற்று அதிகாலை சென்று கொண்டிருந்தார். அப்போது கோவையிலிருந்து கும்பகோணம் நோக்கி வந்த அரசு பஸ் பொங்கலூர் டெலிபோன் எக்சேஞ்ச் அருகே வந்தபோது காருடன் நேருக்கு நேர் மோதியது.

இதில் கார் அப்பளம் போல் நசுங்கியது. இந்த விபத்தில் காரை ஒட்டி வந்த டிரைவர் தாஸ் உள்ளே சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் பஸ்சின் நடத்துனர் திருச்சி, அண்ணா நகரை சேர்ந்த ராஜன் என்பவரது மகன் பாலசுப்பிரமணி (55), அதுபோல் டிரைவர் திருச்சி, மண்ணச்சநல்லூரைச் சேர்ந்த நடராஜன் என்பவரது மகன் சுரேஷ் (44) ஆகியோர் காயம் அடைந்தனர். மேலும் காரில் மோதாமல் இருக்க டிரைவர் வலது புறமாக பஸ்சை திருப்பியதில் அருகில் இருந்த ஒரு வீட்டின் சுற்றுச்சுவர் மீது மோதியது. இதில் அந்த சுவர் இடிந்தவிழுந்ததில் உள்ளே நிறுத்தப்பட்டிருந்த காருக்கு சேதம் ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அவினாசிபாளையம் போலீசார் பல்லடம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அவர்களும் சம்பவ இடத்திற்கு வந்து காருக்குள் சிக்கி இறந்து போன டிரைவர் தாசை வெளியே கொண்டு வந்தனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து அவினாசிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News