மருதமலை முருகன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
- செவ்வாய், வெள்ளி மற்றும் விழா நாட்களில் கோவிலில் கூட்டம் அலைமோதும்.
- விடுமுறை நாட்கள் என்பதால் அதிகபடியான பக்தர்கள் முருகனை தரிசனம் செய்ய படி வழியாகவும் பேருந்து மூலமாகவும் மலைக் கோவிலுக்கு வந்திருந்தனர்.
வடவள்ளி:
கோவை மருதமலையில் பக்தர்களால் 7-ம் படை வீடு என அழைக்கப்படும் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது.
இந்த கோவிலுக்கு தினந்தோறும் கோவை மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். செவ்வாய், வெள்ளி மற்றும் விழா நாட்களில் கோவிலில் கூட்டம் அலைமோதும்.
இன்று மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனையொட்டி காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு, கோ பூஜை நடந்தது.
தொடர்ந்து முருகனுக்கு 16 வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. மேலும் முன் மண்டபத்தில் வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியசுவாமி தங்கமயில் வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
மதியம் உச்சி கால பூஜையை முன்னிட்டு அபிஷேகம் செய்து சுவாமிக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டது. மேலும் வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி தங்கமயில் வாகனத்தில் திருவீதி உலா நடைெபற்றது.
விடுமுறை நாட்கள் என்பதால் அதிகபடியான பக்தர்கள் முருகனை தரிசனம் செய்ய படி வழியாகவும் பேருந்து மூலமாகவும் மலைக் கோவிலுக்கு வந்திருந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து முருகனை தரிசனம் செய்தனர். கூட்டத்தை கட்டுப்படுத்த வடவள்ளி காவல் ஆய்வாளர் லெனின் அப்பாதுரை மேற்பார்வையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.